GO BACK

முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட ரகசியம் : அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது ஹமாஸ் !


 ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு, அதன் முக்கிய செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா கொல்லப்பட்டதை நேற்று  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 30 அன்று காஸா நகரில் உள்ள அல்-ரிமல் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபு ஒபைடாவின் உண்மையான பெயர் ஹுதைஃபா சமீர் அல்-கஹ்லௌட் (Hudhayfa Samir al-Kahlout) என்பதையும், அவர் 'அபு இப்ராஹிம்' என்றும் அழைக்கப்படுபவர் என்பதையும் ஹமாஸ் முதல் முறையாகப் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பை ஹமாஸின் புதிய செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெளியிட்டார். அவரும் தனது முன்னோடியைப் போலவே முகமூடி அணிந்து, 'அபு ஒபைடா' என்ற அதே புனைப்பெயரிலேயே உரையாற்றினார். அபு ஒபைடாவுடன் சேர்த்து, ஹமாஸின் ராணுவத் தளபதி முகமது சின்வார் (Mohammed Sinwar), ரஃபா படைப்பிரிவின் தலைவர் முகமது ஷபானா மற்றும் பல மூத்த தளபதிகளும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதை ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது. முகமது சின்வார் கடந்த மே மாதம் ஒரு சுரங்கப்பாதையில் வைத்து கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் இரண்டு தசாப்தங்களாக ஹமாஸின் முகமாகத் திகழ்ந்த அபு ஒபைடா, 2006-ல் இஸ்ரேலிய வீரர் கிலாத் ஷாலித் கடத்தப்பட்டதை அறிவித்தபோது உலகளவில் பிரபலமானார். சிவப்பு நிறத் துணியால் எப்போதும் முகத்தை மூடியபடி தோன்றும் இவர், ஹமாஸின் உளவியல் போர் மற்றும் முக்கிய அறிவிப்புகளுக்கு மிக முக்கியமானவராகக் கருதப்பட்டார். இவரது மரணம் ஹமாஸ் அமைப்பிற்கு ஒரு மிகப்பெரிய இழப்பாகவும், இஸ்ரேலிய உளவுத்துறையின் ஒரு முக்கிய வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் போர்நிறுத்தம் குறித்து ஆலோசிக்கவுள்ள சூழலில் வெளியாகியுள்ளது. ஹமாஸின் முக்கியப் பொறுப்புகளை வகித்த தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு வருவதால், அந்த அமைப்பின் தலைமை மற்றும் களச் செயல்பாடுகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஹமாஸ் தனது போராட்டத்தைத் தொடரப்போவதாக அறிவித்துள்ளது.