சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஒரு பிரபலமான ஸ்கை ரிசார்ட்டில் (Swiss ski resort) நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 10 இளைஞர்களை ஒரு வங்கி அதிகாரி தீரத்துடன் காப்பாற்றியுள்ள சம்பவம் உலகம் முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Paolo Campolo (55) என்ற வங்கி அதிகாரி, தனது மகளிடமிருந்து வந்த ஒரு பதற்றமான அழைப்பைத் தொடர்ந்து, கொழுந்துவிட்டு எரிந்த தீயையும் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கி ஒரு "ரியல் ஹீரோவாக" (Real-life hero) உருவெடுத்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது, கிரான்ஸ்-மோண்டானா பகுதியில் உள்ள 'லீ கான்ஸ்டலேஷன்' (Le Constellation) பாரில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அந்த நேரத்தில் பாலோவின் மகள் வெளியே காத்திருக்க, அவரது நண்பர்கள் மற்றும் காதலன் பாரின் உள்ளே சிக்கிக் கொண்டனர். உள்ளே புகை மூட்டம் சூழ்ந்து, அலறல் சத்தம் கேட்ட நிலையில், அந்தச் சிறுமி தனது தந்தையைத் தொடர்பு கொண்டு அழுதுகொண்டே உதவி கேட்டுள்ளார் (Pleading for help). உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலோ, ஆபத்தான நிலையிலும் துணிச்சலாகச் செயல்பட்டுள்ளார்.
பாரின் மெயின் என்ட்ரன்ஸ் (Main entrance) மக்கள் கூட்டத்தால் அடைபட்டிருந்த நிலையில், பாலோ அங்கிருந்த ஒரு அவசரகால கதவை (Emergency door) தனது முழு பலத்தையும் பயன்படுத்தித் திறந்துள்ளார். அதன் வழியாக 10 இளைஞர்கள் தப்பித்து வெளியே வர அவர் வழிவகை செய்தார். நொடிப் பொழுதில் பரவிய அந்தப் பயங்கரத் தீயில், சுமார் 40 பேர் உயிரிழந்தனர் மற்றும் 119 பேர் காயமடைந்தனர். புகை மூட்டத்திற்கு நடுவே போராடிய பாலோ, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தில் சிக்கியவர்களைப் பற்றிப் பேசிய பாலோ, "அங்கே பல உடல்கள் எரிந்த நிலையில் கிடந்தன; சிலர் உணர்வுடனும் சிலர் உணர்வின்றியும் இருந்த அந்த காட்சி மிகவும் கோரமானது" என உருக்கமாகத் தெரிவித்தார். தனது உயிரைப் பணையம் வைத்து மற்றவர்களைக் காப்பாற்றிய இந்த வங்கி அதிகாரியின் செயலை சுவிஸ் மற்றும் இத்தாலிய ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. இக்கட்டான சூழலில் ஒரு தந்தை தன் மகளுக்காகவும், சக மனிதர்களுக்காகவும் காட்டிய இந்தத் துணிச்சல் ஒரு மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது.
