பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரையும் தொடர்ந்து 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து பொலிஸார் அவர்களை அழைத்துக்கொண்டு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தவேளை, அவர்கள் தமது கைவிலங்குகளை உயர்த்திக் காட்டி, தேசப்பக்தி வாசகங்களைக் கூறி எச்சரிக்கை விடுத்தனர்.
"திருகோணமலையில் எப்படியாவது புத்தர் சிலையை நிறுவுவோம்" என்று அவர்களில் ஒருவர் கூச்சலிட்டார். இது தமிழர்களுக்கு இந்த பிக்குகளால் விடுக்கப்படும் ஓர் எச்சரிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும். "எங்களை எதுவும் செய்ய முடியாது" என்ற தோரணையில் கைகளை உயர்த்தித் தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியவாறு அவர்கள் நடந்து சென்றனர்.
தமிழர் தாயகம் எங்கும் ஆங்காங்கே புத்தர் சிலைகளும் விகாரைகளும் முளைத்து வருகின்றன. அண்மையில் திருகோணமலையில் அம்மன் சிலையை அகற்றி ஒரு சிங்களப் பிக்கு உடைத்ததும், தமிழர் ஒருவரின் கன்னத்தில் அறைந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவங்களாகும். இலங்கையில் இன்றும் இனத்துவேசம் நீடிக்கிறது என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.
