ராட்சத சிலிண்டர் வெடித்து நால்வர் உடல் சிதறி பலி! கள்ளக்குறிச்சியில் கோர விபத்து


 கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில், எதிர்பாராத விதமாக பலூன்களுக்கு காற்று நிரப்பும் சிலிண்டர் வெடித்ததில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அருகே நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட இந்த வெடிவிபத்து அப்பகுதியையே போர்க்களமாக மாற்றியது. பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்ததில் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடியதால் திருவிழா கோலம் சோகமாக மாறியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணலூர்பேட்டை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். ராட்சத பலூன்களுக்கு கேஸ் நிரப்பும் போது ஏற்பட்ட அழுத்த மாறுபாடே இந்த வெடிப்புக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருவிழாக்களில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி இது போன்ற ஆபத்தான சிலிண்டர்களைப் பயன்படுத்துவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியானவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் துயரச் சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post