உலகையே உலுக்கி வரும் எப்ஸ்டீன் விவகாரத்தில், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ(பிரிட்டன் இளவரசர் என்ற பட்டம் பறிக்கப்பட்டுள்ளது) தொடர்பான புதிய மற்றும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அமெரிக்க நீதித்துறை (DOJ) வெளியிட்டுள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான ஆவணங்களில், ஆண்ட்ரூ தனது மகள்களான இளவரசி பீட்ரைஸ் மற்றும் இளவரசி யூஜினியின் தனிப்பட்ட குடும்பப் புகைப்படங்களை பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுக்கு தொடர்ந்து அனுப்பி வந்தது அம்பலமாகியுள்ளது. எப்ஸ்டீன் சிறையில் இருந்து விடுதலையான பிறகும், அவருடன் ஆண்ட்ரூ நெருங்கிய தொடர்பில் இருந்ததை இந்த மின்னஞ்சல்கள் உறுதிப்படுத்துகின்றன.
மேலும், எப்ஸ்டீனின் கூட்டாளியான கிஸ்லேன் மேக்ஸ்வெல் முன்னிலையில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தரையில் படுத்திருக்க, ஆண்ட்ரூ அவர் மீது குனிந்த நிலையில் இருக்கும் முகம் சுளிக்க வைக்கும் புகைப்படங்களும் இந்த கோப்புகளில் இடம் பெற்றுள்ளன. எப்ஸ்டீன் ஒருமுறை ஆண்ட்ரூவுக்கு 26 வயதுடைய ரஷ்ய பெண் ஒருவரை இரவு உணவிற்கு அறிமுகம் செய்து வைப்பதாகக் கூறியபோது, ஆண்ட்ரூ அதற்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையிலேயே எப்ஸ்டீனுக்கு ரகசிய விருந்து அளிக்க ஆண்ட்ரூ அழைப்பு விடுத்ததும் ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், ஆண்ட்ரூ அமெரிக்காவிற்குச் சென்று அங்குள்ள விசாரணை அமைப்புகளிடம் சாட்சியம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே தனது அரச பதவிகள் மற்றும் கௌரவங்களை இழந்த ஆண்ட்ரூவுக்கு, தற்போது வெளியாகியுள்ள இந்த 'மகள் புகைப்படங்கள்' மற்றும் 'மர்ம புகைப்படங்கள்' விவகாரம் மிகப்பெரிய அரசியல் மற்றும் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகப் பிரதமர் தெரிவித்துள்ளதால், வரும் நாட்களில் ஆண்ட்ரூ கைது செய்யப்படலாம் அல்லது கடும் விசாரணைக்கு உள்ளாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
