விபத்துக்குள்ளான அந்த விமானம், பொலிவியாவின் மத்திய வங்கியிலிருந்து புதிதாக அச்சிடப்பட்ட பணத்தாள்களை ஏற்றிக்கொண்டு வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. விமானம் நெடுஞ்சாலையில் மோதி விபத்துக்குள்ளானதும், அதில் இருந்த பணத்தாள்கள் சாலை முழுவதும் சிதறின. இந்த அதிர்ச்சிகரமான காட்சியைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், மீட்புப் பணிகளுக்குப் பதிலாகச் சிதறிக் கிடந்த பணத்தை எடுக்க முண்டியடித்தனர். இது மீட்புக் குழுவினருக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தியது.
விபத்து நடந்த இடத்தில் பணம் சிதறிக் கிடந்ததால் ஏற்பட்ட கூட்டத்தைக் கலைக்க, நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும் போலீஸாரும் வரவழைக்கப்பட்டனர். பணத்தை எடுக்க முயன்ற பொதுமக்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். இதற்கிடையில், சிதறிக் கிடந்த பணத்தாள்களுக்குச் சட்டப்பூர்வமான மதிப்பு இல்லை என்றும், அவை இன்னும் புழக்கத்திற்கு வரவில்லை என்றும் மத்திய வங்கியின் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார். சுமார் 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த விபத்தில் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் விமானத்தில் இருந்தவர்களா அல்லது சாலையில் சென்றவர்களா என்பது குறித்து முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. விபத்து நடந்த எல் ஆல்டோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விமான விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் பொலிவியா நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
