மதுரை தோப்பூரில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் தற்போது சுமார் 50 சதவீதத்தை எட்டியுள்ளன. முதற்கட்டக் கட்டுமானங்கள் முடிவடைந்துள்ள நிலையில், முழுமையான மருத்துவச் சேவைகள் மற்றும் உள்நோயாளிப் பிரிவுகள் மார்ச் மாத இறுதியில் அல்லது ஜூன் மாதத்திற்குப் பிறகே பயன்பாட்டுக்கு வரும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், அரைகுறையான நிலையில் திறப்பு விழாவை நடத்துவதற்குப் பதில், பணிகள் முழுமையடைந்த பின்பே திறக்கலாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டம் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. எய்ம்ஸ் கட்டுமான தாமதம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், பிரதமர் தனது உரையில் இது குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. மேலும், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்யவும், அங்கு கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் கருத்து தெரிவிக்கவும் பிரதமர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மதுரை பயணத்தின் போது, தென்னக ரயில்வேயின் முக்கியத் திட்டங்கள் மற்றும் காணொளி காட்சி மூலம் சில மேம்பாட்டுப் பணிகளைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். தேர்தலுக்கு முந்தைய இந்தப் பயணம் தென் மாவட்டங்களில் கூட்டணியின் செல்வாக்கை உயர்த்த உதவும் என பாஜக நிர்வாகிகள் நம்புகின்றனர். மதுரையைத் தொடர்ந்து புதுச்சேரிக்கும் பிரதமர் செல்ல உள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
