
உலகக்கோப்பையில் அனிருத்தின் ‘ஆலுமா டோலுமா’ மேஜிக்! ‘Feel the Thrill’ பாடல் வெளியீடு - கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம ட்ரீட்!
இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கவுள்ள 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடலை (Official Event Song) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ளது. தென்னிந்தியத் திரையுலகின் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துப் பாடியுள்ள இந்தப் பாடல், 'Feel the Thrill' (த்ரில்லை உணருங்கள்) என்ற பெயரில் வெளியாகியுள்ளது. உலகக்கோப்பைக்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும் வேளையில், அனிருத்தின் துள்ளலான இசை ரசிகர்களிடையே காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
சுமார் இரண்டு நிமிடம் ஓடும் இந்தப் பாடலை அனிருத் இசையமைத்ததுடன், அவரே பாடியும் உள்ளார். இந்தப் பாடலுக்கான ஆங்கில வரிகளை 'ஹைசன்பர்க்' (Heisenberg) எழுத, ஹிந்தி மற்றும் தமிழ் கலந்த வரிகளை 'ரகீப் ஆலம்' (Raqueeb Alam) எழுதியுள்ளார். "நாடுகள் மோதும்போது, ஆட்டம் பார்க்கப்படுவதில்லை... அது வாழப்படுகிறது" (When nations collide, action isn't watched, it's lived) என்ற வரிகளுடன் தொடங்கும் இந்தப் பாடல், டி20 கிரிக்கெட்டின் வேகம் மற்றும் உணர்ச்சிகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது.
மும்பையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. இது குறித்துப் பேசிய அனிருத், "கிரிக்கெட் என்பது எனக்கு வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு உணர்வு. ஜவான், ஜெயிலர் போன்ற படங்களுக்குப் பிறகு, ஐசிசி போன்ற ஒரு சர்வதேச அமைப்புடன் இணைந்து உலகக்கோப்பைக்காகப் பணியாற்றுவது எனக்குக் கிடைத்த பெருமை. ஒவ்வொரு இதயத்துடிப்பையும் கிரிக்கெட்டுடன் இணைக்கும் விதமாக இந்தப் பாடலை உருவாக்கியுள்ளோம்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பாடலில் பழைய உலகக்கோப்பைத் தொடர்களின் மறக்க முடியாத தருணங்கள், இந்திய அணி கடந்த முறை கோப்பையை வென்ற காட்சிகள் மற்றும் ரசிகர்களின் உற்சாகம் ஆகியவை வீடியோ தொகுப்பாக இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கொழும்பு முதல் மும்பை வரையிலான கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்தைப் பறைசாற்றும் வகையில் வரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கான பார்வைகளைக் கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியா தனது முதல் லீக் போட்டியில் பிப்ரவரி 7-ம் தேதி மும்பையில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் இடையிலான 'மெகா' மோதலுக்கு இந்தப் பாடல் மிகப்பெரிய உத்வேகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 20 நாடுகள் பங்கேற்கும் இந்த மாபெரும் தொடரை அனிருத்தின் அதிரடி இசையுடன் வரவேற்க உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.