தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா சிக்கியது எப்படி- அமலாக்கல் துறை போட்ட கிடுக்கி பிடி
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை தூத்துக்குடி நீதிமன்றத்திலிருந்து மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (மார்ச் 12, 2026) விசாரணைக்கு ஏற்றது. இந்த மனு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) மற்றும் அமைச்சர் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை நான்கு வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2001-2006 அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி வாரிய அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.07 கோடி சொத்து சேர்த்ததாக 2006-ல் திமுக ஆட்சியின் போது வழக்கு தொடரப்பட்டது. தற்போது திமுக அமைச்சரவையில் உள்ள அவர் மீதான இந்த வழக்கில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே இவருக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கை மதுரைக்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை ஏற்கனவே தாக்கல் செய்த மனுவை கீழ் நீதிமன்றம் நிராகரித்திருந்தது. தங்களுக்கு அத்தகைய அதிகாரம் இல்லை என தூத்துக்குடி நீதிமன்றம் கூறியதை அடுத்து, அமலாக்கத்துறை தற்போது உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ், வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற முழு அதிகாரம் உள்ளது என்று அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறை இடையே நிலவும் முரண்பாடுகளும் கவனத்தை ஈர்த்துள்ளன. தங்களை இந்த வழக்கில் ஒரு தரப்பாக இணைக்கக் கோரிய அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்கனவே தூத்துக்குடி நீதிமன்றம் நிராகரித்திருந்தது. தற்போது வழக்கு இடமாற்றம் செய்யப்படுமா என்பது அடுத்த நான்கு வாரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்யும் பதிலைப் பொறுத்தே அமையும் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments: