கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு மீண்டும் சிபிஐ (CBI) சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் இரண்டு முறை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ள நிலையில், மார்ச் 10-ம் தேதி (நாளை) மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தவெக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணலை நாளை தொடங்க அக்கட்சி திட்டமிட்டிருந்தது. இந்த முக்கியமான காலகட்டத்தில் சிபிஐ சம்மன் அனுப்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பணிகள் மற்றும் கட்சியின் முக்கிய ஆலோசனைகள் இருப்பதால், டெல்லி செல்வதற்குப் பதிலாக விசாரணையைச் சென்னையில் நடத்துமாறு அல்லது ஆஜராவதிலிருந்து தற்காலிக விலக்கு அளிக்குமாறு சிபிஐ-யிடம் விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. பரப்புரைக்கு விஜய் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்த கூடுதல் விளக்கங்களைப் பெற சிபிஐ இந்த மூன்றாவது கட்ட விசாரணையைத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அரசியல் சூழலில், சிபிஐ விசாரணை மற்றும் தேர்தல் பணிகள் என இரண்டுமுனை நெருக்கடிகளை விஜய் எதிர்கொண்டு வருகிறார். நாளை நடைபெறவிருந்த வேட்பாளர் நேர்காணல் திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது. சிபிஐ-யின் இந்தச் சம்மன் குறித்து விஜய் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதால், நாளை அவர் டெல்லி செல்வாரா அல்லது கால அவகாசம் கிடைக்குமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: