லண்டன் மசூதி அருகே ஈரான் போர்: மன்னராட்சி ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல்
சுமார் 7:30 மணியளவில் தொடங்கிய இந்த மோதலில், ஈரானின் முன்னாள் மன்னர் முஹம்மது ரேசா பஹ்லவியின் மகன் இளவரசர் ரேசா பஹ்லவிக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கக் கொடிகளுடன் மசூதிக்கு எதிரே நின்றனர். அப்போது மசூதிக்கு அருகில் இருந்த ஈரானிய ஆட்சி ஆதரவாளர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம், சில நிமிடங்களிலேயே கைகலப்பாக மாறியது. போராட்டக்காரர்கள் ஒருவரையொருவர் எட்டி உதைத்தும், குத்தியும் தாக்கியதால் சாலைப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த வன்முறையில் 17 வயது சிறுவன் ஒருவன் தலையில் பலத்த காயமடைந்தான்.
இந்த மோதல் குறித்து தகவல் அறிந்ததும் லண்டன் மாநகர காவல்துறையினர் விரைந்து வந்து கூட்டத்தைக் கலைத்தனர். சமீபத்தில் அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி காமேனி (Ayatollah Ali Khamenei) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மசூதியில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரமே இரு குழுக்களுக்கும் இடையிலான பகையைத் தூண்டி வன்முறைக்கு வித்திட்டதாகத் தெரிகிறது. தற்போது அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், வன்முறை தொடர்பான வீடியோ ஆதாரங்களை வைத்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் இப்போது லண்டன் தெருக்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த மக்களிடையே நிலவும் இந்த அரசியல் பிளவு, லண்டனில் வசிக்கும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையைத் தடுக்க காவல்துறையினர் கலைந்து செல்லும் உத்தரவைப் பிறப்பித்துள்ளதோடு, மீண்டும் மோதல்கள் ஏற்படாமல் இருக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments: