மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் அச்சுறுத்தல் மிக உச்சக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்காவின் மிக முக்கிய ராணுவத் தளம் (US Air Base in Jordan) மீது தங்களின் விண்வெளிப் படையினர் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி அழிவுகரமான தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜோர்டானில் அமைந்துள்ள பிரின்ஸ் ஹாசன் வான்படைத் தளத்தை (Prince Hassan Air Base) குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், அமெரிக்காவின் அதிநவீன எம்.க்யூ-9 (MQ-9) ரக ட்ரோன் நிறுத்தங்கள் மற்றும் கட்டளைக் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை முழுமையாக அழிக்கப்பட்டு, அமெரிக்காவிற்கு ‘மரண அடி’ கொடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் உள்ள உள்கட்டமைப்புகள் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்கள் மீது அமெரிக்க ராணுவம் அண்மையில் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐஆர்ஜிசி (IRGC) தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எவ்வித ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் தங்களின் படைகள் பொறுத்துக் கொள்ளாது என்றும், மீண்டும் அமெரிக்கா வால்நீட்டினால் பிராந்தியத்தில் உள்ள பிற அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது இதைவிடக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் ஈரான் அரசு பகிரங்கமாக எச்சரித்துள்ளது. இந்த ஏவுகணைத் தாக்குதல் எதிரொலியாகக் அண்டை நாடான கத்தாரிலும் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதால் அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், ஈரானின் இந்த அதிரடி ஏவுகணைப் பாய்ச்சலைத் தொடர்ந்து, குவைத் மற்றும் பஹ்ரைன் நாடுகளில் உள்ள அமெரிக்காவின் பேட்ரியாட் (Patriot) வான் பாதுகாப்பு அமைப்புகள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் ரேடார் தளங்களை நோக்கியும் ஈரானிய ராணுவம் தற்கொலைப்படை ட்ரோன்களை (Suicide Drones) ஏவி பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த எதிர்பாராத வான்வழித் தாக்குதலை அடுத்து, தங்களின் வான் பாதுகாப்புப் படைகள் உடனடியாகச் செயல்பட்டு எதிரி நாட்டு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை நடுவானில் இடைமறித்து அழித்து வருவதாகக் குவைத் நாட்டின் பாதுகாப்புப் படைத் தலைமையகம் (General Staff of the Kuwait Army) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. குவைத் நகரின் பல பகுதிகளில் கேட்ட பயங்கர வெடிச்சத்தங்கள் அனைத்தும் இந்த வான்வழி இடைமறிப்புகளால் ஏற்பட்டவை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைகள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்த முறிவுக்குப் பிறகு, ஈரான் தற்பொழுது ஒரே நேரத்தில் ஜோர்டான், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமனின் துக்கம் (Duqm) துறைமுகப் பகுதிகளில் உள்ள அமெரிக்கக் கப்பற்படைத் தளங்கள் மீது தங்களின் ஏவுகணை மற்றும் ட்ரோன் பலத்தைக் காட்டியுள்ளது. வளைகுடா நாடுகள் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் படைகள் நேரடியாக மோதத் தொடங்கியுள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், ஒட்டுமொத்த உலக நாடுகளும் மூன்றாம் உலகப் போர் வெடிக்குமோ என்ற பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.