Posted in

மாஸ்கோ உணவகத்தில் நடந்த பயங்கரத் தாக்குதல்: பெண் உட்பட 3 பேர் பலி, 21 பேர் படுகாயம்!

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவின் மையப்பகுதியில் அமைந்துள்ள உயர்தர இத்தாலிய உணவகம் ஒன்றின் நுழைவாயிலில் சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில், வெடிகுண்டை ஏந்தி வந்த பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மேலும் 21 பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் தலைநகர் மாஸ்கோவில் பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்கோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க குட்ரின்ஸ்காயா சதுக்கத்தில் அமைந்துள்ள ‘பால்சி ரோசி’ (Balzi Rossi) என்ற உணவகத்தில் தனியார் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பரிசுப் பெட்டிக்குள்ளாக நாட்டு வெடிகுண்டை மறைத்து வைத்துக்கொண்டு உணவகத்திற்குள் நுழைய முயன்றபோது, வாயிலில் இருந்த பாதுகாப்பு ஊழியர் அவரைத் தடுத்து நிறுத்திச் சோதனையிட முயன்றார். அப்போது திடீரென வெடிகுண்டு பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இந்தக் கொடூர வெடிப்பில் குண்டைச் சுமந்து வந்த பெண், அவரைத் தடுத்த பாதுகாப்பு ஊழியர் மற்றும் அருகில் நின்றுகொண்டிருந்த வாடிக்கையாளர் ஒருவர் ஆகிய மூவரும் உடல் சிதறி பலியாகினர். இரும்புத் துகள்கள் மற்றும் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அந்த வெடிகுண்டு சுமார் 1 கிலோ டிஎன்டி (TNT) வெடிபொருளின் வல்லமையைக் கொண்டிருந்ததாக ரஷ்யாவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. வெடிவிபத்தின் தாக்கம் காரணமாகச் சுற்றியிருந்த கண்ணாடிகள் நொறுங்கி விழுந்த போதிலும், உணவகத்தின் உள்பகுதிக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட பெண் குறித்த விபரங்களையோ அல்லது இதன் பின்னணியில் உள்ள அமைப்புகள் குறித்தோ ரஷ்ய உளவுத்துறையும் காவல்துறையும் இதுவரை உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. எனினும், அப் பெண் வெடிகுண்டு இருப்பதை அறியாமல் தொலைதூரக் கட்டுப்பாட்டுச் சாதனம் (Remote Detonation) மூலம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், உணவகத்தில் நடைபெற்ற முக்கியப் பிரமுகர்களின் விருந்தைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் ரஷ்ய புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக விசாரித்து வருகின்றன.