ஐபிஎல் போட்டியைக் காணச் சென்ற போது அமைச்சர் போதைப்பொருளைப் பயன்படுத்தினார் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் முன்வைத்த குற்றச்சாட்டும், அதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் சரத் அளித்த விளக்கமும் தமிழக அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசுகையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சியினர் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தனர். விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் சூழ்ந்திருந்த இடத்திலேயே போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக வெளியான அந்த வீடியோ குறித்து உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துப் பேசிய அமைச்சர் சரத், அந்த வீடியோ இரு ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் ஐபிஎல் போட்டி பார்க்கச் சென்ற போது எடுக்கப்பட்டது என்று தெளிவுபடுத்தினார். அத்துடன், போட்டி நடந்த போது தனது ஒன்றரை வயதுக் குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், குழந்தை மாத்திரையை விழுங்காமல் அடம்பிடித்ததால் அதை அட்டட்டையிலிருந்து உடைத்துத் தூளாக்கித் தண்ணீரில் கலந்து கொடுத்த தருணமே தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.
ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் தவறான செயல்களில் ஈடுபட வேண்டிய அவசியம் எனக் கிடையாது என்றும், குழந்தைக்கு மருந்து கொடுத்த நிகழ்வைத் திட்டமிட்டுத் தவறான வழியில் பரப்பி வருவதாக அவர் வேதனை தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக அவதூறுகளைப் பரப்ப வேண்டாம் என்றும், உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.