அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான தனது ‘அதிகபட்ச அழுத்த’ (Maximum Pressure) கொள்கையை மீண்டும் தீவிரப்படுத்தி, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைக் கடுமையாக்கியுள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதன் ராணுவச் செயல்பாடுகளை முடக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்காவின் இந்த புதிய பொருளாதாரத் தடைகள் எந்த அளவிற்கு வெற்றிகரமாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்கும் முதன்மை சக்தியாகச் சீனா உருவெடுத்துள்ளது என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஈரானின் பொருளாதாரத்திற்கு அதன் கச்சா எண்ணெய் ஏற்றுமதியே மிக முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. அமெரிக்கா ஈரானிய எண்ணெய் வர்த்தகத்திற்குத் தடை விதித்துள்ள போதிலும், சீனா தொடர்ந்து ஈரானிடமிருந்து பெருமளவில் கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்து வருகிறது. அமெரிக்கக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்க ‘நிழல் கப்பற்படைகள்’ (Shadow Tankers) மற்றும் சிறிய சுயாதீன சுத்திகரிப்பு ஆலைகளைச் (Teapots) பயன்படுத்திச் சீனா இந்த இறக்குமதியை மேற்கொள்வதால், ஈரானின் பொருளாதாரம் முற்றிலும் முடங்காமல் தப்பித்து வருகிறது.
எனவே, டிரம்ப் நிர்வாகத்தின் புதிய தடைகள் பலனளிக்க வேண்டுமென்றால், சீனா ஈரானிய எண்ணெய வாங்குவதைக் குறைக்க வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும். ஆனால், வாஷிங்டனின் பொருளாதார அழுத்தங்களுக்குப் பணிய மறுக்கும் பீஜிங், தங்களின் ஆற்றல் தேவைகளுக்காக ஈரானுடனான வர்த்தகத் தொடர்பைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதில் உறுதியாக உள்ளது. இதனால் அமெரிக்கா சீன வங்கிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மீது கூடுதல் தடைகளை விதிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம்.
சுருக்கமாகக் கூறின், டொனால்ட் ட்ரம்பின் இந்த கடுமையான பொருளாதார நடவடிக்கை ஈரானை பேச்சுவார்த்தை மேஜைக்குக் கொண்டு வருமா அல்லது அமெரிக்கா-சீனா இடையிலான பொருளாதாரப் போரை மேலும் தீவிரப்படுத்துமா என்பது பீஜிங் எடுக்கப்போகும் முடிவிலேயே தங்கியுள்ளது. இதன் காரணமாக, மத்திய கிழக்கின் எதிர்காலப் புவிசார் அரசியல் சூழலில் சீனா ஒரு முக்கியத் தீர்ப்பாளராக மாறியுள்ளது.