இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் செயலிகள் சிறுவர்கள் மற்றும் சிறார்களிடையே சமூக வலைத்தள அடிமைத்தனத்தை (Social Media Addiction) ஊக்குவிப்பதாக அமெரிக்காவின் 47 மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாகாணங்கள் தொடர்ந்த வழக்கில், மெட்டா நிறுவனம் சுமார் 17.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.1.4 லட்சம் கோடிக்கு மேல்) இழப்பீடு வழங்கச் சம்மதித்துள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப் போராட்டத்தைத் தவிர்க்கவும், பெரும் விசாரணைகளில் இருந்து தப்பவும் இந்த இழப்பீட்டுத் தொகையை 10 ஆண்டுகளில் பிரித்து வழங்க மெட்டா ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த வரலாற்றுப் பூர்வமான ஒப்பந்தத்தின் கீழ், 18 வயதிற்குட்பட்ட சிறார்கள் மற்றும் பதின்பருவத்தினரின் கணக்குகளுக்குக் கடுமையான பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை மெட்டா அமல்படுத்துகிறது. இதன்படி, நாளொன்றுக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே செயலிகளைப் பயன்படுத்த அனுமதிக்கும் ‘Daily Time Limit’ அம்சம் கொண்டுவரப்படுகிறது. மேலும், நள்ளிரவு முதல் அதிகாலை 6 மணி வரை செயலிகளை இயக்க முடியாத வகையில் ‘Nighttime Block’ கட்டுப்பாடுகளும், பள்ளி வேலை நேரங்களில் தேவையற்ற ‘Push Notifications’ வருவதைத் தடுக்கும் வசதிகளும் இயல்புநிலையாகவே (Default) அமைக்கப்பட உள்ளன.
இதுமட்டுமன்றி, சிறார்களின் மனநலனைப் பாதிக்கும் ‘Like’ எண்ணிக்கைகளைக் மறைத்தல், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் உடல் அமைப்பை ஒப்பிடும் பியூட்டி ஃபில்டர்களுக்குத் தடை விதித்தல் போன்ற முக்கிய மாற்றங்களும் செய்யப்படவுள்ளன. போலி பிறந்ததேதிகளைக் கொடுத்து பெரியவர்களுக்கான கணக்குகளைத் தொடங்குவதைத் தடுக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் வயதை உறுதிப்படுத்தும் கண்டிப்பான புதிய தொழில்நுட்ப முறைகளையும் மெட்டா அறிமுகப்படுத்துகிறது.
டெக் நிறுவனங்கள் பயனாளர்களின் நேரத்தை மட்டுமே குறிவைத்துத் தளங்களை வடிவமைக்கக் கூடாது என்பதையும், சிறார்களின் பாதுகாப்பே முதன்மையானது என்பதையும் இந்த வழக்கு அமெரிக்க அளவில் உணர்த்தியுள்ளது. அதேவேளையில், டிக்டாக் மற்றும் யூடியூப் போன்ற பிற முன்னணிச் சமூக வலைத்தள நிறுவனங்களும் இத்தகைய பாதுகாப்புக் கட்டுப்பாடுகளையும், இழப்பீடுகளையும் அமல்படுத்த வேண்டும் என மெட்டா கோரிக்கை விடுத்துள்ளதால், சர்வதேச அளவில் சோஷியல் மீடியா பயன்பாட்டு விதிகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.