சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி நிர்வாகத்திற்கும் முக்கிய வீரர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாகச் செய்திகள் உலா வரும் நிலையில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நேதன் எல்லிஸ் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மெகா ஏலத்தில் ரூ. 2 கோடிக்கு வாங்கப்பட்ட இவர், வரவிருக்கும் 2027 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாகத் தன்னை விடுவிக்குமாறு (Release) சிஎஸ்கே நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசக்கூடிய நேதன் எல்லிஸ், சர்வதேசப் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்காகத் தொடர்ந்து அபாரமாகச் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், தனது தற்போதைய சந்தை மதிப்பைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் 12 கோடிக்கும் அதிகமான ஊதியத் தொகையை அவர் எதிர்பார்த்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சிஎஸ்கே நிர்வாகம் இதற்கு உடன்படாததால், அணியை விட்டு விலகும் முடிவை அவர் தீவிரப்படுத்தியுள்ளார்.
சிஎஸ்கே நிர்வாகத்திடம் விடுவிப்புக் கோரிக்கையை முன்வைத்த சில மணி நேரங்களிலேயே, நேதன் எல்லிஸ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘மும்பை இந்தியன்ஸ்’ (Mumbai Indians) அணியின் கணக்கைப் பின்தொடர (Follow) ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் அவர் வரவிருக்கும் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் டிரேடிங் முறையிலோ அல்லது ஏலத்தின் மூலமாகவோ செல்லத் திட்டமிட்டுள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2026 ஐபிஎல் சீசனில் தொடை தசைநார் காயம் காரணமாக எல்லிஸ் ஒரு போட்டியில் கூட விளையாட முடியாமல் போன நிலையில், அவருக்கு மாற்று வீரராக ஸ்பென்சர் ஜான்சன் சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது மீண்டும் எல்லிஸை முழுமையாகப் பயன்படுத்தச் சென்னை அணி திட்டமிட்டிருந்த வேளையில், அவர் திடீரென வெளியேற விரும்புவதும், மும்பை அணியை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யத் தொடங்கியுள்ளதும் சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.