வட ஆப்பிரிக்கக் கரையில் அமைந்துள்ள ஸ்பெயினின் தன்னாட்சி பகுதியான செக்டாவில் (Ceuta) கடற்கரையோரம் தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கான அகதிகளை பாதுகாப்புப் படையினர் அப்புறப்படுத்த முயன்றபோது பெரும் பரபரப்பும் நெரிசலும் ஏற்பட்டது. சுமார் 150-க்கும் மேற்பட்ட கலவர தடுப்பு காவல்துறையினர் மற்றும் இராணுவப் படையினர் இணைந்து பெனிடெஸ் (Benítez) கடற்கரையில் இருந்தவர்களை துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய முகாம்களுக்கு மாற்றும் நடவடிக்கையைத் தொடங்கினர்.
அதிகாலை வேளையில் காவல் துறையினர் அகதிகளைச் சூழ்ந்து கொண்டு சிறிய குழுக்களாக அழைத்துச் செல்ல முயன்றபோது, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் துறைமுகப் பகுதியை நோக்கி ஓடியதால் கட்டுக்கடங்காத கூட்டம் முண்டியடித்தது. இதன்போது ஏற்பட்ட நெரிசலைத் தொடர்ந்து சூழலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், ரப்பர் தோட்டாக்கள் மற்றும் லத்திகளைக் கொண்டு கூட்டத்தைக் கலைக்க முயன்றதில் சிலர் காயமடைந்தனர்.
மொராக்கோ எல்லையைக் கடந்து கடந்த ஜூலை மாத இறுதியில் இருந்து சுமார் 80,000 அகதிகள் செக்டா பகுதிக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து அங்கே தீவிரக் கடற்படை மற்றும் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பான்மையானோர் திருப்பி அனுப்பப்பட்டபோதிலும், சுமார் 5,000 முதல் 10,000 வரையிலான அகதிகள் இன்னமும் முறையான தங்குமிட வசதிகள் இன்றி கடற்கரைகளிலும் தெருக்களிலும் தங்கியுள்ளனர்.
தற்போது நீதிமன்ற அனுமதியுடன் துறைமுகப் பகுதியில் 1,500 நபர்கள் வரை தங்கக்கூடிய புதிய தற்காலிக முகாம் திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், ஆயிரக்கணக்கான அகதிகள் தெருக்களில் திரண்டு வருவதால் செக்டா நகரில் கடுமையான பாதுகாப்புக் கெடுபிடிகள் விதிக்கப்பட்டுப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.