சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பான பிஃபாவின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவிற்கு எதிராக இங்கிலாந்து கால்பந்து சங்கத் (FA) தலைவரும் பிஃபா கவுன்சில் உறுப்பினருமான டெபி ஹெவிட் பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். உலகக்கோப்பைப் போட்டியின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற ரகசியத் திட்டம் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தொலைபேசி அழைப்பிற்குப் பின் வீரருக்கு அளிக்கப்பட்ட தடையை நீக்கியது குறித்துச் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிஃபா வணிக அமைப்பான ‘FIFA Forward Enterprise’ (FFE) மூலம் உலகக்கோப்பையின் வணிகம் மற்றும் நுழைவுச்சீட்டு உரிமைகளில் 21 சதவீதப் பங்குகளைத் தனியார் நிறுவனத்திற்கு விற்க இன்ஃபான்டினோ திட்டமிட்டார். ஐரோப்பியக் கால்பந்து கூட்டமைப்பான UEFA மற்றும் ஆசியக் கால்பந்து கூட்டமைப்பின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த திட்டம் கைவிடப்பட்ட போதிலும், இதில் நடந்த சட்டவிரோத ரகசியப் பேச்சுவார்த்தைகள் குறித்த முழு ஆவணங்களையும் அக். 15-ஆம் தேதி நடைபெறும் பிஃபா கவுன்சில் கூட்டத்திற்கு முன் வெளியிட வேண்டும் என ஹெவிட் கோரியுள்ளார்.
இதனிடையே, உலகக்கோப்பை தொடரில் அமெரிக்க வீரர் ஃபோலரின் பாலோகனுக்கு வழங்கப்பட்ட சிவப்பு அட்டை மற்றும் தடையை பிஃபா திடீரென ரத்து செய்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நடவடிக்கை குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாம் தனிப்பட்ட முறையில் இன்ஃபான்டினோவைத் தொடர்புகொண்டு அந்தத் தடையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியதாக ஒப்புக் கொண்டார். அரசியல் தலையீடு காரணமாகவே பிஃபா இந்தத் தடையை நீக்கியதா என்பது குறித்துப் பிஃபா நிர்வாகம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என இங்கிலாந்து சங்கம் தற்போது கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த தொடர் சர்ச்சைகளால் இன்ஃபான்டினோ மீதான நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டதாகக் கூறியுள்ள UEFA, அமெரிக்க நீதிமன்றங்களில் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. மேலும், இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து கால்பந்து சங்கங்கள் இன்ஃபான்டினோவின் அடுத்த தவணைத் தலைவர் பதவிக்கான ஆதரவை அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளதால், வரவிருக்கும் பிஃபா தலைவர் தேர்தலில் அவருக்குப் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.