[வீடியோ கீழே இணைப்பு] அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்ட வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் சந்திப்பின் (WHCD) போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகையே அதிரவைத்துள்ளது. அப்போது ட்ரம்ப் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட அடுத்த நொடியே, மின்னல் வேகத்தில் அவர் முன்னே பாய்ந்து வந்து நின்ற ஒரு மர்ம மனிதர், தற்போது சமூக வலைதளங்களில் ‘அறியப்படாத நாயகனாக’ (Unsung Hero) கொண்டாடப்படுகிறார். குண்டுகள் பாயும் திசையை நோக்கித் தயங்காமல் ஓடி வந்து, தனது உடலையே கேடயமாக மாற்றி ட்ரம்பைப் பாதுகாத்த அந்த வீரரின் துணிச்சல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலின் தரைத்தளத்தில் திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன், அங்கிருந்த அனைவரும் பதறிப்போய் தலைகுனிந்தனர். ஆனால், அந்த நபர் மட்டும் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மேடையை நோக்கிப் பாய்ந்து சென்று, ட்ரம்பைச் சுற்றிக் கட்டிப்பிடித்துக் கொண்டார். அந்த அதிவேக எதிர்வினையினால் தான் ட்ரம்ப் எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக மேடையின் பின்புறத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த வீரர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை என்றாலும், அவர் ஒரு அதிரடிப் படை (Secret Service) அதிகாரி என்று நம்பப்படுகிறது.
இந்தத் தாக்குதலை நடத்தியது கலிபோர்னியாவைச் சேர்ந்த 31 வயது கோல் ஆலன் (Cole Allen) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஒரு ஷாட்கன், கைத்துப்பாக்கி மற்றும் பல கத்திகளுடன் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டித் தாக்க முயன்றபோது அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். இந்த மோதலின் போது மிக அருகிலிருந்து சுடப்பட்ட ஒரு பாதுகாப்பு அதிகாரி, தனது புல்லட் புரூப் ஜாக்கெட் (Ballistic Vest) அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது ஒரு “அதிசயம்” என்று அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு வெள்ளை மாளிகையிலிருந்து பேசிய அதிபர் ட்ரம்ப், தன்னைத் தற்காத்த அதிகாரிகளின் வீரத்தைப் புகழ்ந்து தள்ளினார். “அவர் மிக அருகிலிருந்து சக்திவாய்ந்த துப்பாக்கியால் சுடப்பட்டார், ஆனால் அந்த ஜாக்கெட் அவரைக் காப்பாற்றிவிட்டது. நான் அந்த அதிகாரியிடம் பேசினேன், அவர் இப்போது நலமாக இருக்கிறார்” என்று ட்ரம்ப் தெரிவித்தார். தனது உயிரைப் பணயம் வைத்து அதிபரைக் காப்பாற்றிய அந்த வீரரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.