அர்ஜென்டினாவிலிருந்து ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசு கப்பலில் பயங்கரமான வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தத் தொற்றால் இதுவரை மூன்று பயணிகள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒரு முதிய தம்பதியினரும் அடங்குவர். எலிகளின் எச்சம் மற்றும் சிறுநீர் வழியாகப் பரவக்கூடிய ‘ஹான்டா வைரஸ்’ பாதிப்பே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) முதற்கட்ட ஆய்வில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் கப்பலில் தற்போது 23 பிரிட்டிஷ் பயணிகள் உட்பட சுமார் 150-க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவித்து வருகின்றனர்.
கப்பலில் நோய் தொற்று பரவியதை அடுத்து, அது திட்டமிட்டபடி கேப் வெர்டே (Cape Verde) துறைமுகத்தில் நுழைய அந்நாட்டு அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் கப்பல் தற்போது நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நோய்வாய்ப்பட்ட இரண்டு ஊழியர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில், அவர்களைக் கரைக்குக் கொண்டு செல்ல அனுமதி கிடைக்காததால் பெரும் பதற்றம் நிலவுகிறது. பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் பயணி ஒருவர் தற்போது தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கப்பலில் உள்ள மற்ற பயணிகளுக்குத் தொற்று பரவாமல் தடுக்க அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கப்பல் நிர்வாகமான ‘ஓசன்வைடு எக்ஸ்பெடிஷன்ஸ்’ (Oceanwide Expeditions), ஸ்பெயினின் டெனெரிஃப் (Tenerife) தீவுக்குக் கப்பலைத் திருப்பிச் சென்று அங்கு பயணிகளை இறக்கிவிடவும், தேவையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டு வருகிறது. இருப்பினும், ஸ்பெயின் நாட்டு அதிகாரிகள் இதற்கு அனுமதி வழங்குவார்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தச் சூழலைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், கப்பலில் உள்ள தங்களது நாட்டு குடிமக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. எலிகளால் பரவும் இந்த அரிய வகை வைரஸ், கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடியது என்பதால் கப்பலில் உள்ள பயணிகள் அனைவரும் பெரும் அச்சத்தில் உள்ளனர். அர்ஜென்டினாவின் படகோனியா பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்தபோது இந்தத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், இது குறித்த ஆழமான விசாரணை நடைபெற்று வருகிறது.