கடந்த பிப்ரவரி 28 அன்று டெஹ்ரானில் உள்ள கமேனியின் குடியிருப்பு வளாகத்தைக் குறிவைத்து இஸ்ரேலின் ‘புளூ ஸ்பாரோ’ (Blue Sparrow) ஏவுகணைகள் தாக்கியதில், அப்போதைய உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் மொஜ்தபாவின் மனைவி ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, முகத்தில் பலத்த தீக்காயமடைந்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாகவும், ஒரு காலை இழந்து செயற்கை கால் (Prosthetic Leg) பொருத்தக் காத்திருப்பதாகவும் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் மற்றும் தி இன்டிபென்டன்ட் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மார்ச் மாதம் அவர் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற பிறகும் பொதுவெளியில் தோன்றாதது இந்த சந்தேகங்களை மேலும் அதிகரித்தது.
இந்த நிலையில், உச்ச தலைவர் அலுவலகத்தின் புரோட்டோகால் இயக்குநர் ஜெனரல் மசாஹர் ஹொசைனி, ஈரானின் அரை-அதிகாரப்பூர்வ ‘ஃபார்ஸ்’ (Fars News) செய்தி நிறுவனம் மூலம் முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது அதன் அதிர்வலைகளால் (Blast wave) மொஜ்தபா கமேனி நிலைதடுமாறி தரையில் விழுந்ததாகவும், அப்போது அவரது காதின் பின்னால் ஒரு ‘சிறு கீறல்’ மற்றும் லேசான எலும்பு முறிவு (Small crack/scratch behind the ear) மட்டுமே ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேற்கத்திய எதிரி நாடுகள் திட்டமிட்டே இத்தகைய பொய் வதந்திகளைப் பரப்புவதாகவும் அவர் சாடியுள்ளார்.
மேலும், மொஜ்தபாவுக்கு ஏற்பட்ட முதுகு மற்றும் முழங்கால் காயங்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் முழுமையாகக் குணமாகிவிட்டதாகவும், அவர் தற்போது “முழு ஆரோக்கியத்துடன்” (Full Health) ஆட்சியை வழிநடத்தி வருவதாகவும் ஈரான் அரசு உறுதிப்படுத்தியுள்ளது. எதிரி நாடுகள் அவரது இருப்பிடத்தைக் கண்டறிந்து மீண்டும் தாக்குதல் நடத்த முயல்வதாலேயே அவர் பொதுவெளியில் தோன்றாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளார் என்றும், மக்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும், சரியான நேரத்தில் அவர் நாட்டு மக்களிடம் உரையாற்றுவார் என்றும் மசாஹர் ஹொசைனி குறிப்பிட்டுள்ளார். அண்மையில் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் மற்றும் ராணுவத் தளபதி அலி அப்துல்லாஹி ஆகியோர் மொஜ்தபாவை ரகசிய இடத்தில் நேரில் சந்தித்துப் பேசியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.