Posted in

திடீரென மாறிய டெல்லி ஸ்கெட்ச்! புரோட்டோகாலை உடைத்து மத்திய அமைச்சருக்கு விஜய் போட்ட ஸ்கெட்ச் !

மத்திய அரசியல் தலைவர்களைச் சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், தனது சந்திப்புப் பட்டியலில் அதிரடி மாற்றம் செய்து டெல்லி வட்டாரங்களை அதிரவைத்துள்ளார். ஏற்கனவே திட்டமிட்டிருந்த தலைவர்களின் பட்டியலைத் தாண்டி, அதில் இல்லாத ஒரு முக்கிய மத்திய அமைச்சரைச் சந்திக்க வேண்டும் என்றும், அதற்காக உடனடியாக நேரம் ஒதுக்கக் கோரியும் தனது அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டெல்லியில் இருந்தபடியே எடுக்கப்பட்ட இந்தத் திடீர் முடிவு, தற்போதைய அரசியல் மற்றும் அரசு வட்டாரங்களில் மிகப்பெரிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கர்நாடக அரசு மேகதாது அணை கட்டப் போவதாக அறிவித்துள்ள நிலையில், தமிழகத்திற்கு வர வேண்டிய காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்கவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவுமே விஜய் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார் என்பது தெளிவாகப் புரிகிறது.

ஒரு மாநில முதலமைச்சர், மத்திய அமைச்சரைச் சந்திக்க வேண்டும் என்றால் அதற்குப் பல நாட்களுக்கு முன்பே கோரிக்கை மனு அனுப்பி, அதற்கான நெறிமுறைகளைப் (Protocol) பின்பற்ற வேண்டும் என்பதுதான் பொதுவான விதிமுறை. ஆனால், ஒரு மாநில முதல்வர் நாட்டின் தலைநகரில் இருக்கும்போது அவசர நிமித்தமாக ஒரு மத்திய அமைச்சரின் சந்திப்பைக் கோரினால், அதற்கு மத்திய அமைச்சர் உடனடியாக நேரம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் புரோட்டோகாலில் உள்ளது.

இந்தச் சட்ட விதியைப் பயன்படுத்தி, டெல்லியில் முகாமிட்டுள்ள முதல்வர் விஜய், மத்திய ஜலசக்தி (நீர் வழித் துறை) அமைச்சரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். இதனால், எவ்வித முன்னறிவிப்பும் இன்றித் தமிழக முதல்வரின் இந்தத் திடீர் சந்திப்புக் கோரிக்கையை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அமைச்சகம் தள்ளப்பட்டுள்ளது.

இந்த அவசரச் சந்திப்பைப் பயன்படுத்தி, தமிழகத்தில் கோடைக் காலத்தில் ஏற்படப் போகும் கடுமையான குடிநீர் மற்றும் விவசாய நீர் பற்றாக்குறையைத் தீர்க்க மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விஜய் மிகக் காரசாரமாக விவாதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்டத் துடிக்கும் கர்நாடகாவின் திட்டத்திற்கு மத்திய ஜலசக்தி அமைச்சகமும், மத்திய நீர் ஆணையமும் எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என்பதில் விஜய் மிகவும் கறாரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்.

தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நீர் விவகாரத்தில் அணுவளவும் சமரசம் செய்ய முடியாது என்பதை டெல்லித் தலைமைக்கு நேரடியாக உணர்த்தவே, முதல்வர் விஜய் இந்த ‘நெறிமுறை’ அதிரடியைக் கையில் எடுத்துள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.