தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பெண் நிர்வாகி செய்த பல லட்ச ரூபாய் பண மோசடி காரணமாக, மனமுடைந்த முதியவர் ஒருவர் எலி மருந்து குடித்து விபரீத முடிவு எடுத்துள்ள சம்பவம் காஞ்சிபுரம் மற்றும் சென்னை வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை டி.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்த 73 வயதான விஸ்வநாதன் என்ற முதியவர், தனது குடும்பத்துடன் படப்பை அருகே குடியேறியுள்ளார். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் கலைவாணி, தவெக ஆட்சியில் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசு அடுக்குமாடி குடியிருப்பு வீடு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, விஸ்வநாதனைத் தனது மோசடி வலையில் வீழ்த்தியுள்ளார்.
அரசு வீடு என்ற பேராசையில் விஸ்வநாதனும் முதற்கட்டமாகத் தனது வாழ்நாள் சேமிப்பிலிருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் பணத்தைக் கலைவாணியிடம் நம்பிக் கொடுத்துள்ளார். ஆனால், அதோடு திருப்தியடையாத அந்தப் பெண் நிர்வாகி, விஸ்வநாதனின் ஏடிஎம் (ATM) கார்டைப் பயன்படுத்தி மேலும் 2 லட்சம் ரூபாயைச் சுருட்டியதுடன், அவரது அசல் நில ஆவணங்களையும் மிரட்டிப் பறித்துக்கொண்டு திருப்பித் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 9 லட்சம் ரூபாய் பணம் மற்றும் வாழ்வாதாரமான நில ஆவணங்களை இழந்து நடுத்தெருவுக்கு வந்த முதியவர் விஸ்வநாதன், இதுகுறித்து நியாயம் கேட்டு படப்பை காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.
ஆனால், ஆளும் தவெக கட்சியின் முக்கியப் பெண் நிர்வாகி என்பதால், கலைவாணிக்கு ஆதரவாகப் படப்பை காவல்துறையினர் செயல்பட்டதாகவும், விஸ்வநாதனின் புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அவரை அலைக்கழித்ததாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் ஒட்டுமொத்தமாகப் பணத்தையும் இழந்து, காவல்துறையினராலும் வஞ்சிக்கப்பட்டுத் துரோகத்தின் உச்சகட்டத்திற்குச் சென்ற விஸ்வநாதன், கடுமையான மன உழைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இறுதியாக, “நான் எப்படியாவது கலைவாணியிடம் இருந்து நம் பணத்தை மீட்டு வருகிறேன்” என்று குடும்பத்தினரிடம் கூறிவிட்டுச் சென்றவர், மனவேதனை தாங்காமல் எலி மருந்து குடித்துள்ளார். பின்னர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆட்சியைப் பிடித்த சில வாரங்களிலேயே தவெக கட்சியின் மாவட்ட பெண் நிர்வாகி ஒருவர், முதியவரை ஏமாற்றி 9 லட்சம் ரூபாய் நில மோசடி செய்து, அவரது தற்கொலைக்குக் காரணமாக இருந்த விவகாரம் முதல்வர் விஜய் அவர்களின் அரசுக்கு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஏழை முதியவரின் உயிரோடு விளையாடிய தவெக நிர்வாகி கலைவாணி மற்றும் ஆளும்கட்சிக்கு பயந்து குற்றவாளிக்கு முட்டுக்கொடுத்த படப்பை போலீஸ் அதிகாரிகள் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர்.