தமிழக சட்டமன்றத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த தமிழக முதலமைச்சர் சி. ஜோசெப் விஜய், தான் தக்கவைத்துக் கொண்ட பெரம்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் (MLA) அலுவலகத்தை இன்று முறைப்படி திறந்து வைத்தார். சென்னை வியாசர்பாடி சர்மா நகர் முதலாவது தெருவில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்திற்கு, தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதலமைச்சர் விஜய் முதன்முறையாக இன்று வருகை தந்தார். அங்கு அவருக்கு தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) நிர்வாகிகள் மற்றும் தொகுதி பொதுமக்கள் சார்பாக உற்சாகமான மற்றும் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நவீன எம்.எல்.ஏ. அலுவலகத்தில் முதலமைச்சருக்கென பிரத்யேக தனி அறை, நவீன கணினி வசதிகள் மற்றும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதற்காக 10-க்கும் மேற்பட்ட பிரத்யேக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அலுவலகத்தை திறந்து வைத்து அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்ட முதலமைச்சருக்கு, அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள அரசு இ-சேவை மையத்தையும் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளான மின்சாரம், சாலை வசதி, குடிநீர், துப்புரவுப் பணி, கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் போன்ற கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு செல்லும் வகையில் ‘மக்கள் சேவை தளம்’ என்ற பிரத்யேக மொபைல் செயலியையும் (App) அவர் இன்று அறிமுகம் செய்தார். இந்தத் தளம் மூலம் பொதுமக்கள் தங்களின் புகார்களைப் பதிவு செய்த சில நொடிகளிலேயே அது நேரடியாக எம்.எல்.ஏ. அலுவலக கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றுவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தொகுதி மக்களின் நீண்ட நாள் தேவைகளை டிஜிட்டல் முறையில் விரைவாக நிவர்த்தி செய்ய இந்தச் செயலி உதவும் என அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
தொகுதி கள ஆய்வின் ஒரு பகுதியாக, அருகில் உள்ள நியாய விலைக் கடைக்கு (ரேஷன் கடை) நேரில் சென்று முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்த அவர், தகுதியுள்ள பயனாளிகளுக்குப் புதிய குடும்ப அட்டைகள் (Ration Cards), வீட்டு மனைப் பட்டாக்கள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் தனது கரங்களால் வழங்கினார். மேலும், தொகுதி மக்களிடம் இருந்து நேரடியாகப் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர், “யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம்” என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதுடன், மக்களின் குறைகள் மீது மிக விரைவில் உரிய தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார்.