Posted in

பிரிட்டன் கொலை வழக்கு: ஜே.டி.வென்ஸ் சர்ச்சை விமர்சனம்!

பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய இளைஞரால் 18 வயது வெள்ளை இன மாணவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டு, ஐரோப்பாவில் கட்டுப்பாடற்ற முறையில் நிகழும் ‘குடியேறிகளின் பெரும் படையெடுப்பு’ (Mass Invasion of Migrants) தான் இதற்குக் காரணம் என்று அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் (JD Vance) மிகக் காட்டமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தற்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இடையே கடுமையான தூதரக ரீதியிலான மோதலை உருவாக்கியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் பிரிட்டனின் சவுதாம்ப்டன் நகரில் ஹென்றி நோவாக் என்ற மாணவர், விக்ரம் திக்வா (23) என்ற இந்திய வம்சாவளி இளைஞரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விக்ரம் திக்வாவிற்கு பிரிட்டன் நீதிமன்றம் அண்மையில் ஆயுள் தண்டனை விதித்தது. கொலை நடந்த போது, குற்றவாளி விக்ரம் தான் ஒரு இனவெறித் தாக்குதலுக்கு ஆளானதாகப் பொய் புகாரளித்ததால், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மாணவர் ஹென்றியைப் பிரிட்டன் போலீசார் தவறுதலாகக் கைவிலங்கிட்டு நடத்திய விசித்திரமான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து உலகளவில் வலதுசாரி அமைப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ், “ஒரு நாகரிகம் எப்படி அழியுமோ அதேபோல்தான் ஹென்றி நோவாக்கும் இறந்துள்ளார்; தன்னை அதிகாரிகளிடம் ஒப்படைத்தும், அவர்கள் அவரை நம்பாமலும், அவர் செய்யாத வெறுப்புக் குற்றச்சாட்டின் பேரில் கைவிலங்கிடப்பட்டு அநாதையாகக் கைவிடப்பட்டுள்ளார்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், ஐரோப்பிய மேட்டுக்குடியினர் தங்களின் சுய வெறுப்பு அரசியலைக் கைவிட்டு, மேற்கத்திய கலாச்சாரத்தை வெறுக்கும் குடியேறிகளின் படையெடுப்பிற்கு எதிராக நின்றிருந்தால் ஹென்றி இன்று உயிருடன் இருந்திருப்பார் என்றும் அவர் சாடியுள்ளார்.

ஜே.டி.வென்ஸின் இந்தத் தலையீட்டிற்குப் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மரின் (Keir Starmer) அலுவலகம் உடனடியாகக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது போன்ற கருத்துக்கள் பிரிட்டன் ஜனநாயகத்தில் தலையிடுவதாகவும், தெருக்களில் பிரிவினையைத் தூண்டுவதாகவும் பிரிட்டன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. மேலும், உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினர் தங்களது சோகத்தைப் பிரிவினைவாத அரசியல் ஆக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ள நிலையில், வெளிப்புற சக்திகள் இதனைப் பயன்படுத்திக் கொள்வதை அனுமதிக்க முடியாது என்றும் பிரிட்டன் அரசு திட்டவட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளது.