இன்ஸ்டாகிராம் (Instagram) சமூக ஊடகத்தைப் பயன்படுத்திப் பெண்களைக் காதலிப்பதாக ஏமாற்றி, அவர்களுக்குப் போதை ஊசி போட்டு ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம் என்ற நபரை
ராயபுரம் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரேம் என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், பிரேம் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மூலம் பல பெண்களைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் போதை ஊசி செலுத்தி, அவர்களை நிர்வாணமாக்கி அடித்துத் துன்புறுத்தும் சைக்கோத்தனமான வீடியோக்களை எடுத்து, அதைத் தனது மனைவிக்கே வாட்ஸ்அப்பில் அனுப்பி, “உன்னையும் உன் குழந்தைகளையும் இப்படித்தான் செய்யப் போறேன்” என்று கொடூரமாக மிரட்டி வந்துள்ளார்.
இதற்கு முன்பாக திருச்சிராப்பள்ளியில் ஒரு பெண்ணின் முடியைக் கட் செய்து, போதை ஊசி போட்டுப் பிரச்சனை செய்த வழக்கில் பிரேம் ஏற்கனவே போலீஸாரால் ரிமாண்ட் செய்யப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறையிலிருந்து வந்த பிறகும், வாணி என்ற மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து கொண்டு, தனது மனைவியையும் குழந்தைகளையும் கொலை செய்துவிடுவதாகப் பிரேம் தொடர்ந்து பிளாக்மெயில் செய்து மிரட்டி வந்துள்ளார். இரண்டு பெண் குழந்தைகளுடன் கணவரைப் பிரிந்து வாழும் அந்தப் பெண், தங்களின் பராமரிப்புச் செலவிற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து ஜூன் 5-ஆம் தேதி ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீஸார் ஆரம்பத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலைய வைத்துள்ளனர். இதையடுத்து, அவர் எஃப்-5 (F-5) காவல் சரகத் துணைக் ஆணையரை நேரில் சந்தித்துப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீஸார் அதிகாலை 4 மணிக்குத் தனிப்படை அமைத்துப் பிரேமை அதிரடியாகக் கைது செய்து ரிமாண்ட் செய்தனர். தலைமறைவாக இருக்கும் அவரது கூட்டாளி வாணி என்ற பெண்ணை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.