உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது சொந்தக் குடும்பத்தை விட விளாடிமிர் புதினின் ரஷ்ய ராணுவத்திற்காகப் போரிடுவதே தமக்கு முக்கியம் என்று பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் ஓல்ட்ஹாம் (Oldham) பகுதியைச் சேர்ந்த 50 வயதான பென் ஸ்டிம்சன் (Ben Stimson) என்ற நபர், ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் இருந்தபடி ஊடகவியலாளர் ஒருவருக்கு அளித்த பேட்டியிலேயே இவ்வாறு தனது வினோதமான கொள்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னதாகப் பழங்காலப் பொருட்கள் வியாபாரியாக இருந்த பென் ஸ்டிம்சன், உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள ரஷ்ய ஆதரவுப் படைகளுடன் இணைந்து போரிட்டதற்காக, கடந்த 2017-ஆம் ஆண்டு பிரிட்டனில் பயங்கரவாதக் குற்றச்சாட்டின்கீழ் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர் ஆவார். சிறையிலிருந்து விடுதலையான பின்னரும் மனம் மாறாத அவர், மீண்டும் மாஸ்கோவிற்குத் தப்பிச் சென்று புதினின் ராணுவத்தில் அதிகாரப்பூர்வமாகத் தன்னை இணைத்துக் கொண்டார். உக்ரைன் எல்லையில் ரஷ்யப் படைகளின் சீருடையை அணிந்துகொண்டு அவர் வெளியிடும் வீடியோக்கள் பிரிட்டன் மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இந்தப் பேட்டியின் போது, “ரஷ்யாவிற்காகப் போரிடும் உங்களது முடிவால் உங்களது சொந்தக் குடும்பத்தினரே உங்களை முற்றிலுமாகப் புறக்கணித்து, அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொண்டுள்ளனரே, இது உங்களுக்கு வருத்தமளிக்கவில்லையா?” என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஸ்டிம்சன், “நான் ஒரு கொள்கைவாதி (Principled man); டான்பாஸ் பகுதியில் உள்ள ரஷ்யப் பூர்வகுடி மக்களைக் காப்பதே என் நோக்கம். அதற்காக என் குடும்பத்தினர் என்னை வெறுத்து உறவை முறித்துக் கொண்டாலும், அதை நான் ஒரு விலையாகக் கொடுத்துவிட்டு ரஷ்யாவிற்காகத் தொடர்ந்து போரிடுவேன்” என்று திமிராகக் கூறியுள்ளார்.
பிரிட்டன் அரசாங்கம் உக்ரைனுக்குப் பில்லியன் கணக்கில் நிதியுதவியும் நவீன ஆயுதங்களையும் வழங்கி வரும் வேளையில், அந்நாட்டின் குடிமகன் ஒருவரே ரஷ்யா பக்கம் நின்று பிரிட்டன் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட ஆயுதங்களை எள்ளி நகையாடுவது கண்டனத்திற்குரியது எனப் பிரிட்டன் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இவரைப் போன்ற நபர்கள் தேசத்துரோகிகள் என்றும், இவர்கள் மீண்டும் பிரிட்டனுக்குள் நுழையும் பட்சத்தில் உடனடியாகக் கைது செய்யப்பட்டு மிகக் கடுமையான சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் பிரிட்டன் அரசு எச்சரித்துள்ளது.