உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவின் அண்டை நாடான லாட்வியாவின் வான்பரப்பிற்குள் அடையாளம் தெரியாத ட்ரோன் (ஆளில்லா விமானம்) ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளது. இதனால் எல்லையோரப் பகுதிகளில் கடுமையான வான்வழி எச்சரிக்கை (Air Alert) விடுக்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, எல்லையைப் பாதுகாக்கும் நேட்டோ (NATO) அமைப்பின் போர்விமானங்கள் உடனடியாக வான்நோக்கிச் செலுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டன.
தொடர்ந்து மூன்றாவது நாளாக லாட்வியா நாட்டில் இத்தகைய ட்ரோன் ஊடுருவல் கண்டறியப்பட்டுள்ளது ஒட்டுமொத்த ஐரோப்பிய பிராந்தியத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள லுட்சா (Ludza), ரெசெக்னே (Rēzekne) உள்ளிட்ட கிழக்கு லாட்வியா பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் அந்நாட்டு ராணுவம் அவசர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இந்த ட்ரோன் அச்சுறுத்தல்கள், ரஷ்யாவின் அதிநவீன மின்னணு போர்முறை (Electronic Warfare) மற்றும் ஜிபிஎஸ் ஜாமிங் (GPS Jamming) தொழில்நுட்பத்தின் விளைவாக இருக்கலாம் என்று ராணுவ வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர். உக்ரைன் தரப்பில் இருந்து ரஷ்ய இலக்குகளை நோக்கி ஏவப்படும் ட்ரோன்களை, ரஷ்யா தனது ஜாமிங் கருவிகள் மூலம் திசைதிருப்பி நேட்டோ நாடுகளின் வான் எல்லைக்குள் விழச் செய்வதாக லாட்வியா மற்றும் அதன் அண்டை நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
தொடர் ட்ரோன் ஊடுருவல் காரணமாக, லாட்வியாவின் கிழக்கு எல்லைப் பகுதிகளில் வான் பாதுகாப்புப் படைகளின் கூடுதல் பிரிவுகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் உக்ரைன் ட்ரோன் ஒன்று லாட்வியாவின் எண்ணெய் கிடங்கில் விழுந்து வெடித்த சம்பவத்தால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில், அந்நாட்டுப் பிரதமர் எவிகா சிலினா தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழல் நேட்டோ மற்றும் ரஷ்யா இடையேயான எல்லையோரப் பதற்றத்தை உச்சகட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.