தமிழ்நாட்டில் ஊழலை வேரோடு ஒழிக்கும் நோக்கில், மாநில லோக் ஆயுக்தா (Lokayukta) அமைப்புக்குக் கூடுதல் அதிகாரங்களையும், முழுமையான தன்னாட்சி உரிமையையும் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதிரடியாக முடிவு செய்துள்ளார். தற்போதைய நிலையில், தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைப்பு ஒரு சிவில் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரத்தைக் கொண்டிருந்தாலும், அமைச்சர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் மாநில அரசின் முன்அனுமதியைப் பெற வேண்டிய கட்டாயச் சூழல் நீடிக்கிறது. முந்தைய திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் முடக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கடுமையான விமர்சனங்கள் உள்ள நிலையில், முதல்வர் விஜய் எடுக்கவுள்ள இந்த அதிரடி முடிவு கோட்டை வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.
பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் லோக் ஆயுக்தா அமைப்பு சர்வ வல்லமை படைத்த, லஞ்ச ஊழலுக்கு எதிராகத் தானே நேரடியாகச் சோதனை நடத்தி வழக்குப் பதிவு செய்யும் வலுவான அதிகாரத்தைக் கொண்டுள்ளது. அதேபோன்றதொரு தன்னாட்சி மற்றும் புலனாய்வு அதிகாரங்களை தமிழ்நாட்டின் லோக் ஆயுக்தா அமைப்பிற்கும் வழங்குவதே முதலமைச்சர் விஜய்யின் தற்போதைய திட்டமாகும். இதன்படி, லோக் ஆயுக்தா அமைப்பு இனி ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்கத் தனி விசாரணைப் பிரிவை (Investigation Wing) உருவாக்கிக் கொள்ளவும், அரசின் எவ்வித அனுமதியும் இன்றிச் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேரடியாகச் சோதனை நடத்தவும் வழிவகை செய்யப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2019-ஆம் ஆண்டு லோக் ஆயுக்தா சட்டம் அமலுக்கு வந்தாலும், அது பற்கள் இல்லாத ஒரு சாதாரணக் காகித அமைப்பாகவே இருந்து வருவதாகச் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். தற்போது சென்னை உயர் நீதிமன்றத்திலும் லோக் ஆயுக்தா சட்டத்தை வீரியமாக அமல்படுத்தக் கோரி வழக்குத் தொடரப்பட்டு, அதற்கு அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ள சூழலில், தவெக அரசு இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரப் போர்க்கால அடிப்படையில் ஆலோசித்து வருகிறது. லோக் ஆயுக்தாவின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனத்தில் நிலவும் குளறுபடிகளை நீக்கி, முற்றிலும் சுதந்திரமான அமைப்பாக மாற்ற முதலமைச்சர் விஜய் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
ஆட்சிக்கு வந்த இந்த குறுகிய காலத்திற்குள் முந்தைய திமுக அமைச்சர்களின் ஊழல் புகார்களை விசாரிக்க ஆளுநரின் அனுமதியைக் கோரியுள்ள தவெக அரசு, தற்போது லோக் ஆயுக்தாவுக்கே முழு அதிகாரம் வழங்க முற்படுவது எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளுங்கட்சியினரையும் ஒருசேர உதறலெடுக்க வைத்துள்ளது. “யார் தவறு செய்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்ற கொள்கையோடு முதல்வர் விஜய் களமிறங்கியுள்ளதால், இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வரும் பட்சத்தில் தவெக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகளும் லோக் ஆயுக்தாவின் நேரடி கண்காணிப்பு வளையத்திற்குள் வரும். இதனால், தமிழக அரசியலில் ஊழலுக்கு எதிரான மிக முக்கிய நிர்வாகச் சீர்திருத்தமாக இது பார்க்கப்படுகிறது.