Posted in

ஏழை மக்களின் ரேஷன் உரிமைக்காக களமிறங்கிய முதலமைச்சர் விஜய்… பிரதமர் மோடிக்கு அவசரக் கோரிக்கை!

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் – 2013-ல் மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள புதிய சட்டத் திருத்தம், தமிழ்நாட்டின் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மிகக் கடுமையாகப் பாதிக்கும் எனக் கூறி, அதனை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வலியுறுத்திப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மத்திய நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள இந்த புதிய சட்ட வரைவு, ஏழை மக்களின் உணவுப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குவதாக அமைந்துள்ளதால், மாநிலத்தின் நலன் கருதி இதில் பிரதமர் நேரடியாகத் தலையிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல் மாதத்திற்கு தலா 35 கிலோ கிராம் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசு முன்மொழிந்துள்ள புதிய திருத்தத்தின்படி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு நபருக்கு மாதத்திற்கு 7 கிலோ கிராம் மட்டுமே உணவு தானியங்கள் வழங்கப்படவுள்ளது. பல்வேறு உள்-வகைப்பாடுகளுக்கு இடையே உள்ள சமத்துவமின்மையைக் களைவதே இதன் நோக்கம் என மத்திய அரசு விளக்கமளித்தாலும், இது நடைமுறையில் ஏழை மக்களுக்குக் கிடைக்கும் ரேஷன் பொருட்களின் அளவைக் கணிசமாகக் குறைத்துவிடும் என முதலமைச்சர் விஜய் கவலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டதால், இங்கு சராசரி குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 3.54 ஆக மட்டுமே உள்ளது. இதனால், நபர் ஒருவருக்கு 7 கிலோ கிராம் என மாற்றினால் ஒரு குடும்பத்திற்கு வெறும் 21 முதல் 24 கிலோ கிராம் வரை மட்டுமே ரேஷன் பொருட்கள் கிடைக்கும். மக்கள் தொகையைக் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தென் மாநிலங்களைத் தண்டிக்கும் விதமாக இந்தத் திருத்தம் அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் விஜய், இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 18.64 லட்சம் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 70 லட்சம் பயனாளிகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டு, மாநிலத்திற்கு வழங்கப்படும் உணவு தானிய ஒதுக்கீடு 42,040 மெட்ரிக் டன் அளவுக்குக் குறையும் என்றும் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.

இந்த அந்தியோதயா (AAY) திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் அனைவரும் கணவரை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், நிலையான வருமானம் இல்லாத முதியவர்கள், பழங்குடியினர் மற்றும் நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்கள் போன்ற சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் ஆவர். நாடாளுமன்றத்தால் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழிக்கக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தை, குடும்ப வரியாக மாற்றி உச்சவரம்பு விதிப்பது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோரை மேலும் வறுமையில் தள்ளும் எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், பழையபடி குடும்பத்திற்கு 35 கிலோ என்ற நிபந்தனையற்ற முறையையே தொடர வேண்டும் எனப் பிரதமரைத் தன் கடிதத்தில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *