தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்த சில நாட்களிலேயே, தவெக அரசு மற்றும் மத்திய பாஜக அரசு ஆகிய இரண்டிற்கும் எதிராக வரும் ஜூன் 29-ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) அதிரடியாக அறிவித்துள்ளது . கோவையில் நடைபெற்ற கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளுக்காக இந்த மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, ஐந்து ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகளுக்கு மட்டும் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தவெக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதனைச் சாடியுள்ள கம்யூனிஸ்ட் கட்சி, அத்தகைய வரம்புகள் ஏதுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களையும் புதிய தவெக அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்து அவர்களைக் கடன் சுமையில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. மேலும், பல்வேறு அரசுத் துறைகளில் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் காண்ட்ராக்ட் மற்றும் அவுட்சோர்சிங் தொழிலாளர்களைக் காலங்கடத்தாமல் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதும் கம்யூனிஸ்டுகளின் முதன்மைக் கோரிக்கையாக உள்ளது.
மறுபுறம், மத்தியில் ஆளும் ஆர்எஸ்எஸ் – பாஜக அரசு, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைத் திணித்துத் தனது மறைமுக ஆட்சியை ஆளுநர் மூலமாகக் கொண்டுவர முயன்றதாக வீரபாண்டியன் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஜனநாயக நெறிமுறைகளை மீறி மாற்றாட்சியை உருவாக்க முயன்ற பாஜகவின் அந்த சதியை முறியடிக்கவே, தவெக அரசுக்குத் தாங்கள் வெளியில் இருந்து நிபந்தனைக்குட்பட்ட ஆதரவை வழங்கினோம் என்று அவர் விளக்கமளித்தார். சமூக நீதி, சமநீதி, மற்றும் மதச்சார்பின்மை கொள்கைகளைப் பாதுகாப்பதாக முதல்வர் விஜய் உறுதியளித்துள்ள போதிலும், மக்களின் விருப்பத்திற்கு மாறாக அரசு எங்கேனும் தடம் புரண்டால் காம்ரேடுகள் யார் என்பதைப் போராட்டக் களத்தில் காட்டுவோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தற்போது திமுக கூட்டணியில் இருந்து முற்றிலும் வெளியேறி, அகில இந்திய அளவில் மட்டுமே ‘இந்தியா’ (INDIA) கூட்டணியில் நீடிப்பதாகக் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தில் தவெக அரசுக்கு ஆதரவளித்தாலும், தங்களின் மக்கள் சார்ந்த போராட்டக் கொள்கைகளில் எவ்வித சமரசமும் இல்லை என்பதை இந்த ஜூன் 29 ஆர்ப்பாட்ட அறிவிப்பு உணர்த்துகிறது. விவசாயக் கடன் தள்ளுபடி, தொழிலாளர் நலன் மற்றும் பொதுத்துறை நிறுவனப் பாதுகாப்பு உள்ளிட்ட 5 முக்கியக் கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரளவிருப்பது, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆரம்பத்திலேயே ஒரு புதிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.