மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே உச்சக்கட்டப் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்பொழுது ஈரான் மீதான புதிய ராணுவத் தாக்குதல்களைத் திடீரென ரத்து செய்துள்ளார். இதுமட்டுமின்றி, “ஈரானுடன் நாங்கள் ஒரு சிறந்த போர் நிறுத்தத் தீர்வைக் கண்டுள்ளோம், இன்றோடு போரை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம்” (We ended the war today) என்று வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப் அதிரடியாகப் பிரகடனம் செய்துள்ளார். ஈரான் மீது ‘இன்றிரவு மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும்’ என டிரம்ப் மிரட்டல் விடுத்த சில மணி நேரங்களிலேயே இந்த அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்தத் திடீர் மனமாற்றத்திற்குப் பின்னால் ஒரு முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் மிக உயர்ந்த தலைவர்களுடன் நடத்தப்பட்ட ரகசியப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாகக் கூறியுள்ள டிரம்ப், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கக் கூடாது என்ற அமெரிக்காவின் முதன்மைக் கோரிக்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் வரும் வார இறுதியில் ஐரோப்பாவில் வைத்து அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும், ஒப்பந்தம் இறுதியானவுடன் ஈரான் மீதான அமெரிக்காவின் கடல்சார் பொருளாதாரத் தடைகள் முழுமையாக நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அமெரிக்க அதிபரின் இந்த ‘திடீர் அமைதி’ முழக்கத்தை ஈரான் அரசு முழுமையாக இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இது குறித்துப் பேசிய ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஇ, “அமெரிக்காவுடன் ஒரு இறுதி ஒப்பந்தத்தை எட்டுவது குறித்து ஈரான் இன்னும் எந்தவொரு இறுதி முடிவுக்கும் வரவில்லை” என்று கூறி டிரம்பின் அவசரப் பிரகடனத்திற்குக் முட்டுக்கட்டை போட்டுள்ளார் . இதனால், சர்வதேச எரிசக்திச் சந்தையைக் கட்டுப்படுத்த ஈரானின் முக்கியக் கச்சா எண்ணெய் முனையமான ‘கார்க் தீவை’ (Kharg Island) அமெரிக்கா ராணுவ ரீதியாகக் கைப்பற்றும் என டிரம்ப் அச்சுறுத்தியதால், உலக சந்தையில் ஏற்பட்ட கடுமையான கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பணவீக்க அழுத்தமே டிரம்பை தற்காலிகமாகப் பின்வாங்க வைத்துள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
மறுபுறம், இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா, கத்தார், துருக்கி உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து செயல்படுவதாக டிரம்ப் கூறினாலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நிலைப்பாடு இதில் முரண்பாடாகவே உள்ளது. ஈரானின் அணு ஆயுதப் பொருள் விவகாரப் பேச்சுவார்த்தையை இஸ்ரேல் வரவேற்றாலும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை தங்களின் ராணுவ நடவடிக்கை ஓயாது என இஸ்ரேல் பிடிவாதம் காட்டி வருகிறது. டிரம்ப் அடிக்கடி ‘அமைதி ஒப்பந்தம் தயார்’ என்று கூறிவிட்டு மீண்டும் தாக்குதல் நடத்தும் வழமையைக் கொண்டிருப்பதால், இந்த அறிவிப்பு போரின் உண்மையான முடிவா அல்லது உலக நாடுகளை ஏமாற்றும் டிரம்பின் வழக்கமான இராஜதந்திர உத்தியா என்ற சந்தேகம் சர்வதேச அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.