தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 பள்ளி மாணவி, கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பையும் பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய இந்த விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில், தூத்துக்குடி மகிளா போக்சோ சிறப்பு நீதிமன்றம் தற்போது மிக முக்கியத்துவம் வாய்ந்த இறுதித் தீர்ப்பை வழங்கி, ஒட்டுமொத்த வழக்கிற்கும் முடிவுரை எழுதியுள்ளது.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த 38 வயதான தர்ம முனீஸ்வரன் என்ற மாவீரன் என்பவரைக் காவல் துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு அறிவியல் பூர்வ ஆதாரங்களுடன் கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த தூத்துக்குடி போக்சோ நீதிமன்ற நீதிபதி எம். பிரீத்தா, குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் இரட்டை மரண தண்டனை (Double Death Penalty) விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்பட்ட போது, நீதிபதி குற்றவாளி தர்ம முனீஸ்வரனைத் தனியறையில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை முழுமையாக எழுதிய நீதிபதி பிரீத்தா, சட்டம் வழங்கிய உச்சகட்ட தண்டனையான மரண தண்டனையை உறுதி செய்து, தனது தீர்ப்புப் பேனாவின் முனையை உடைத்தார். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு 77 நாட்களுக்குள் இந்த அதிவேக நீதி கிடைத்துள்ளது பொதுமக்கள் மத்தியில் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காகவும், தனக்கான சட்டப்பூர்வ உரிமைகளைப் பயன்படுத்துவதற்காகவும் குற்றவாளிக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், பாதுகாப்பு காரணங்களுக்காகக் குற்றவாளி பாளையங்கோட்டை மத்தியச் சிறையிலிருந்து மதுரை மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த அதிவேகத் தீர்ப்பை வழங்கிய காவல் துறை மற்றும் அரசு வழக்கறிஞருக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.