நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சமூக ஊடக உத்திகள் மூலம் இளம் தலைமுறை (Gen-Z) வாக்காளர்களைத் தன் வசம் இழுத்து மாபெரும் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். தவெக-வின் இந்தத் அசுரத்தனமான டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் ரீல்ஸ், மீம்ஸ் உள்ளிட்ட ‘ஜென்-இசட்’ பாணி பிரச்சாரங்களால் தங்களின் பாரம்பரிய வாக்கு வங்கி சரிந்துள்ளதை உணர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), தற்போது அதற்குப் பதிலடி கொடுக்கத் தயாராகியுள்ளது. இதன் முதல் கட்டமாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் “Gen Z திமுக – இளம் தலைமுறையினர் சந்திப்பு” (GenZ DMK Meetup) என்ற பிரம்மாண்ட ஆலோசனைக் கூட்டம் அவசரமாக நடத்தப்பட்டுள்ளது.
திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் இந்த அதிரடி கூட்டம் சனிக்கிழமை அன்று (மே 30) அரங்கேறியுள்ளது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த கல்லூரி மாணவர்கள், இளம் பட்டதாரிகள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தீவிரமாகச் செயல்படும் ‘இளைய தலைமுறை’ பிரதிநிதிகள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். சாதி ஒழிப்பு, சமூக நீதி, சமத்துவம் மற்றும் மாநில உரிமைகள் போன்ற திராவிடக் கொள்கைகளை இந்தத் தலைமுறைக்கு அவர்களின் மொழியிலேயே எப்படிக் கொண்டு சேர்ப்பது என்பது குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
அரசியல் களத்தில் கடந்த காலங்களில் நிலவிய மேடைப் பேச்சுகள் மற்றும் போஸ்டர் கலாச்சாரங்களை மாற்றி, தற்போதைய தொழில்நுட்ப உலகிற்கு ஏற்ப திமுக மாற வேண்டியதன் அவசியத்தை இக்கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தினர். குறிப்பாக, முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு, இளைஞர்களை மையமாக வைத்துத் தனது சமூக வலைதள கட்டமைப்பை வலுப்படுத்தி வரும் நிலையில், அதற்குப் போட்டியாகத் திமுகவும் இனி ‘ட்விட்டர் ஸ்பேஸ்’, ‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்’ மற்றும் ‘பாட்காஸ்ட்’ (Podcast) தளங்களில் புதுமையான அரசியல் விவாதங்களை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது. இளம் வாக்காளர்களின் தேவைகள், வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலக் கல்வித் திட்டங்கள் குறித்த அவர்களின் நேரடிக் கருத்துக்களும் இந்த மீட்டிங்கில் சேகரிக்கப்பட்டன.
இருப்பினும், தவெக அரசுக்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள பேராதரவிற்கும், முதல்வர் விஜய்யின் ‘ஜென்-இசட்’ தாக்கத்திற்கும் மத்தியில் திமுகவின் இந்தத் திடீர் வியூகம் எந்தளவிற்குப் பலன் கொடுக்கும் என்ற விவாதம் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக தன்னை முழுமையாக மறுசீரமைப்பு செய்து வரும் சூழலில், இந்த இளம் தலைமுறையினர் சந்திப்பு என்பது வெறும் ஒருநாள் நிகழ்வாக இல்லாமல், அடிமட்டத் தொண்டர்களுடனான தொடர்பை மீட்டெடுக்கும் ஒரு தொடக்கப்புள்ளியாக அமைய வேண்டும் எனப் அரசியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த புதிய அணுகுமுறை மூலம், இழந்த இளைஞர்களின் ஆதரவைத் திமுக மீண்டும் தன்பக்கம் திருப்புமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.