ஓமன் நாட்டின் கடலோரப் பகுதியில் 14 இந்தியக் கடற்படைப் பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்த ‘எம்.டி. எல் கெயா’ (MT El Gaia) என்ற பனாமா கொடி பொருத்திய வர்த்தகக் எண்ணெய் தாங்கிக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத் துறை (MEA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கப்பலில் இருந்த 14 இந்தியர்களில் 13 மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான ஒரு இந்திய மாலுமியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மத்திய கிழக்கு மற்றும் பாரசீக வளைகுடாப் பகுதியில் சர்வதேச கடல்சார் பாதைகளில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. ஓமன் நாட்டின் உள்ளூர் நிர்வாகத்தின் விரைவான ஆதரவுடன் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், மீட்கப்பட்ட 13 இந்தியர்களும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகக் கப்பல்கள், மாலுமிகள் மற்றும் சிவிலியன் கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகம் ஓமன் அதிகாரிகளுடன் இணைந்து மாயமான மாலுமியை மீட்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணித்து ஒருங்கிணைத்து வருகிறது. மேலும், பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த உடனடியாகப் பதற்றத்தைக் குறைத்து இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச கடல்சார் பாதைகளில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச வர்த்தகக் கப்பல் துறையில் 12 சதவீதத்திற்கும் அதிகமான மாலுமிகளை இந்தியா கொண்டுள்ள நிலையில், மாலுமிகளின் பாதுகாப்பிற்காகச் சர்வதேச அவசரகால ஆதரவு நெட்வொர்க்கை உருவாக்கப் பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் வலியுறுத்திய அடுத்த நாளே இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.