Posted in

முதலமைச்சர் விஜய்க்கு தலைவலியாகும் ஆர்வக்கோளாறு அமைச்சர்கள்!

தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்று 50 நாட்களைக் கடந்துள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசுக்கு, எதிர்க்கட்சிகளின் அரசியல் நெருக்கடிகளை விட, தங்களது சொந்த அமைச்சர்களின் ‘ஆர்வக்கோளாறு’ நடவடிக்கைகளே தற்போதைய மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் அரசுப் பள்ளி ஆங்கில ரீல்ஸ் சர்ச்சை ஓய்வதற்குள், தவெக அரசின் மற்றொரு முக்கிய அமைச்சரான ‘கில்லி’ சரத்குமார் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான ஒரு விசித்திரமான வீடியோ சர்ச்சையில் சிக்கியிருப்பது கோட்டை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ளியில் ஆய்வு நடத்தியபோது, மாணவிகளிடம் பப்ளிசிட்டிக்காக கேமராக்கள் முன்னிலையில் ஆங்கிலக் கேள்விகளைக் கேட்டு ‘லாஸ்ட் பெஞ்ச்’ என்று தரம் பிரித்து அவமதித்ததாக உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையான கண்டனங்களை முன்வைத்தனர். இந்த விவகாரமே இன்னும் முழுமையாக ஓயாத நிலையில், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் ஐபிஎல் (IPL) கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானத்தில் ஒரு பெண்ணுடன் அமர்ந்து கொண்டு, தனது செல்போன் மீது ஒரு வெள்ளை நிற பவுடரைக் கொட்டி, அதை ஏடிஎம் கார்டால் தட்டுவதும், மற்றொரு கையில் 500 ரூபாய் நோட்டைச் சுருட்டி வைத்திருப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

Nakkheeran

அமைச்சரின் இந்த ‘தக் லைஃப்’ வீடியோ காட்சிகள், அவர் பொது இடத்தில் வெளிப்படையாகவே ஏதோவொரு போதைப் பவுடரைப் பயன்படுத்துகிறாரா என்ற ரீதியில் சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரிடையே கடுமையான விவாதங்களையும், கடுமையான விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது. தவெகவின் கொள்கைகளுக்கும், “போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு” என்ற முதலமைச்சர் விஜய்யின் இலக்கிற்கும் முற்றிலும் முரணாக, ஒரு பொறுப்பான அமைச்சரே இப்படி நெட்டிசன்களிடம் சிக்கியிருப்பது ஒட்டுமொத்த அரசுக்கும் சர்வதேச அளவில் ஒரு தவறான பிம்பத்தை (Negative image) உருவாக்க வழிவகுத்துள்ளது.

தொடர் விளம்பர மோகம், பொறுப்பற்ற வீடியோக்கள் எனத் தவெகவின் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்களின் நடவடிக்கைகள் முதலமைச்சர் விஜய்யை மிகுந்த வேதனையிலும், கோபத்திலும் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது. “மக்களுக்காக உழைக்கக் கொடுத்த பதவியை வைத்துக் கொண்டு, சமூக வலைத்தளங்களில் இப்படிப் பப்ளிசிட்டி தேடுவதையும், சர்ச்சைகளில் சிக்குவதையும் சகித்துக் கொள்ள முடியாது” என விஜய் தரப்பு சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்குக் கடுமையான ‘வார்னிங்’ கொடுத்துள்ளதாகவும், விரைவில் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் (Cabinet Reshuffle) வர வாய்ப்புள்ளதாகவும் பனையூர் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *