தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வரும் சூழலில் முதல்வர் தலைமைச் செயலகத்திற்கு வராமல் தவிர்த்து வருவது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் கடுமையாகச் சாடியுள்ளார். மக்கள் பணிகளைப் புறந்தள்ளிவிட்டுத் திரைப்படக் கொண்டாட்டங்களில் ஈடுபடும் தவெக அரசின் போக்குக் கண்டனத்திற்குரியது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், “ஜனநாயகன் திரைப்படம் வெளியான நாளன்று மாநிலத்தில் அறிவிக்கப்படாத அரசு விடுமுறை போல அமைச்சர்களும், தவெக சட்டமன்ற உறுப்பினர்களும் திரையரங்குகளுக்குச் சென்று ரீல்ஸ் போட்டுக்கொண்டிருந்தனர். வார நாட்களில் வழக்கமாகத் தலைமைச் செயலகத்திற்கு வரும் முதல்வர் விஜய், படம் வெளியான நாளில் இருந்து 3 நாட்களாகக் கோட்டைக்கு வரவில்லை. திரைப்படத்தின் வசூல் மற்றும் வரவேற்பு குறித்த கவலையிலேயே அவர் நேரத்தைக் கழித்து வருகிறார்” எனக் குற்றம் சாட்டினார்.
மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறைச் சிக்கல்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அதைப் பற்றி எந்தவிதக் கருத்தும் தெரிவிக்காமல் முதல்வர் விஜய் மௌனம் சாதிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். “மாணவர்கள் தெருவில் இறங்கிப் போராடும் போது, தவெக தம்பிகள் ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மண்டியிட்டு மண்சோறு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். திரையில் காட்டும் மாய பிம்பங்களுக்கும் நிஜமான ஆட்சி நிர்வாகத்திற்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள்” என்றும் அவர் கூறினார்.
காவிரி நதிநீர் உரிமை, மேகதாது அணை விவகாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்துக் கவலைப்படாமல், ஆளுங்கட்சி அமைச்சர்கள் திரையரங்குகளில் கண்ணீர் வடிப்பதும் கொண்டாடுவதும் கேலிக்கூத்தாக உள்ளது எனத் தெரிவித்த உதயகுமார், காவல் மரணங்களைத் தடுக்கத் தவறிய தவெக அரசின் ஆயுட்காலம் எண்ணப்பட்டு வருவதாக எச்சரித்தார். சினிமா மோகத்திலிருந்து விலகி மக்களின் அன்றாடப் பிரச்சனைகளில் முதல்வர் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.