கரூர் பிரச்சார நெரிசல் வழக்கில் தவெக தலைவர் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை முதல் குற்றவாளியாகக் கைது செய்ய சட்டத்துறை பரிந்துரைத்த போதும், “அவர் ஒரு நடிகர், இப்பதான் கட்சி தொடங்கியிருக்கிறார்” எனத் தாயுள்ளத்தோடு மன்னித்து மு.க.ஸ்டாலின் வழக்கிலிருந்து விளக்கு அளித்தார் என திமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி திடுக்கிடும் தகவலைப் போட்டுடைத்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ரகுபதி, தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் சட்டமன்றப் பேச்சுவார்த்தைகள் குறித்துக் கடுமையாகச் சாடினார். கரூரில் பிரச்சார வாகனம் தாமதமாக வந்தது, திட்டமிட்ட நெரிசலை ஏற்படுத்தியது போன்ற நடவடிக்கைகளால்தான் அசம்பாவிதம் நிகழ்ந்தது என்றும், அதற்கு விஜய்யே முதல் பொறுப்பாளி என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனிதநேய அடிப்படையில் விஜய்யைக் கைது செய்ய வேண்டாம் எனக் கூறியதை நினைவுகூர்ந்த ரகுபதி, இன்றைக்கு அதே விஜய்யும் தவெகவினரும் மனிதநேயத்தைக் கேலிக்கூத்தாக்கி வரலாற்றுத் தரவுகளைத் திரித்துப் பேசுவதாகக் கொந்தளித்தார்.
இதே சந்திப்பில் துரை வைகோ குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “அவரையெல்லாம் அரசியல் உலகிலேயே ஒரு பொருட்டாக நாங்கள் கருதுவதில்லை; துரை வைகோவெல்லாம் அரசியல் ஜோக்கர்கள். திமுக போட்ட பிச்சையில்தான் அவர் எம்பி-யாகவே அமர்ந்திருக்கிறார்” எனக் காரசாரமாகத் தெரிவித்தார். மேலும், கூட்டணி ஆட்சியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரைக் கடுமையாக விமர்சித்த விஜய், தற்போது அதே தலைவர்களை வைத்துக்கொண்டு சமூகநீதி கல்லாப்பெட்டியை நிரப்பி வருகிறார் என்றும் சாடினார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நெருங்கி வரும் சூழலில், திமுக மூத்த தலைவரான ரகுபதி முன்வைத்துள்ள இந்த அதிரடி குற்றச்சாட்டுகளும், ஸ்டாலின் – விஜய் இடையிலான பழைய பின்னணி வெளிப்பாடுகளும் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.