கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டு கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தொடர்பாக, தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மீதான குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்யைக் குற்றவாளி என்று கூறுவதோ அல்லது அவரது பெயரை இதில் இழுப்பதோ எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று நீதிபதிகள் அதிரடியாகத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்த விவகாரத்தை முன்வைத்து ஆளும் தவெக அரசுக்கு முட்டுக்கட்டை போட முயன்ற எதிர்க்கட்சியான திமுகவுக்கு உச்ச நீதிமன்றத்தில் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்து அரசு வேலை மற்றும் நிதியுதவிகளை வழங்குவதற்காக முதலமைச்சர் விஜய் வரும் ஜூலை 10 அன்று கரூர் செல்லத் திட்டமிட்டுள்ளார். இதனைத் தடுத்து நிறுத்தக் கோரியும், சிபிஐ விசாரணை நிலுவையில் இருக்கும்போது தவெக அமைச்சர்கள் இதுகுறித்து பொதுவெளியில் பேசத் தடை விதிக்கக் கோரியும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்ச நீதிமன்றத்தில் அவசர இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரித்த நீதிபதிகள் கே.வி. விசுவநாதன் மற்றும் அலோக் அரதே ஆகியோர் அடங்கிய அமர்வு, திமுக தரப்பு வாதங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தது.
விசாரணையின் போது திமுக தரப்பு வழக்கறிஞர்கள் முதலமைச்சர் விஜய்யை இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்று குறிப்பிட்ட போது குறுக்கிட்ட நீதிபதிகள், “தமிழ்நாடு காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையிலோ (FIR) அல்லது வழக்கை விசாரித்து வரும் சிபிஐ (CBI) தாக்கல் செய்த எப்.ஐ.ஆரிலோ முதலமைச்சர் விஜய்யின் பெயர் குற்றவாளிப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. சில அமைச்சர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் மட்டுமே இதில் உள்ள நிலையில், முதலமைச்சரைக் குற்றவாளி என நீங்கள் எப்படிக் கூற முடியும்? இதனை நீதிமன்றம் ஒருபோதும் ஏற்காது” என்று ஆணித்தரமாகப் போட்டுடைத்தனர்.
மேலும், “உங்களது அரசியல் சண்டைகளைத் தீர்த்துக் கொள்ளும் மேடையாக உச்ச நீதிமன்றத்தைப் பயன்படுத்தாதீர்கள்; உங்கள் மோதல்களை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்திய நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்யப் போவதாக எச்சரித்தனர். இதனால் வேறு வழியின்றி திமுக தரப்பு தங்களது மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டதை அடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பின் மூலம் முதலமைச்சர் விஜய்யின் கரூர் பயணத்திற்கான தடைகள் முற்றிலும் நீங்கியுள்ளதுடன், தவெக அரசுக்கு மிக முக்கியமான சட்டரீதியான வெற்றியும் கிடைத்துள்ளது.