Posted in

100 மீட்டர் சுற்றளவிலும் பார் அமைக்கலாம்! டாஸ்மாக் பார்களுக்கான விதிகளில் தமிழக அரசு அதிரடி தளர்வு!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து இயங்கி வரும் பார்களைத் தொடங்குவது மற்றும் அவற்றுக்கு புதிய உரிமங்களை வழங்குவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய விதிமுறை மாற்றங்களையும் புதிய தளர்வுகளையும் அறிவித்துள்ளது. இதன் மூலம் பார் உரிமையாளர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் எதிர்கொண்டு வந்த பல்வேறு நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நேரடியாக ஒட்டியுள்ள அல்லது இணைந்துள்ள இடங்களில் மட்டுமே பார்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய தளர்வுகளின்படி, டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பொருத்தமான இடங்களைத் தேர்வு செய்து பார்களை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பார் உரிமம் கோருபவர்களுக்கு கூடுதல் இடத் தேர்வுகளை வழங்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பார்களின் உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பார் அமைப்பதற்கான குறைந்தபட்ச இடத்தின் பரப்பளவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 15 சதுர மீட்டராக இருந்த குறைந்தபட்ச பரப்பளவு, தற்போது 20 சதுர மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் இடவசதி கிடைப்பதுடன், உணவு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பார்களுக்கான முந்தைய ஒப்பந்தக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்கி அதிக வருவாய் ஈட்டவும், சட்டவிரோதப் பார்களைத் தடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய தளர்வுகளின் அடிப்படையில் விரைவில் புதிய டெண்டர்கள் கோரப்படவுள்ள நிலையில், டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை மதுக்கடை மற்றும் பார் செயல்பாடுகளில் புதிய மாற்றத்தைக் கொண்டுவரும் எனக் கருதப்படுகிறது.