வீடியோ கீழே உள்ளது: மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் தற்போது இந்தியப் பெருங்கடல் வரை பரவியுள்ளது. ஈரானுக்குச் சொந்தமான, சுமார் 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெயைச் சுமந்து சென்ற பிரம்மாண்ட எண்ணெய் கப்பலை (Tanker), அமெரிக்கக் கமாண்டோக்கள் நடுக்கடலில் வைத்து அதிரடியாகச் சிறைபிடித்துள்ளனர். ஈரானிய எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி ஏற்கனவே தடையில் இருந்த இந்தக் கப்பல், இன்று அதிகாலை இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்தபோது அமெரிக்க ராணுவத்தால் முற்றுகையிடப்பட்டது. சிங்கப்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தக் கப்பலை ‘எந்தவித அசம்பாவிதமுமின்றி’ தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் (CENTCOM) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சர்வதேசக் கடல் பரப்பானது தடையை மீறும் கப்பல்களுக்கான புகலிடம் அல்ல என்று அமெரிக்கா மிகத் தெளிவாக எச்சரித்துள்ளது. ஈரானுக்கு நிதி மற்றும் பொருள் ஆதரவை வழங்கும் சட்டவிரோத வலையமைப்புகளை முறியடிக்க உலகெங்கிலும் இத்தகைய தேடுதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்வோம் என அமெரிக்கா கூறியுள்ளது. ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை, ‘தூஸ்கா’ (TOUSKA) என்ற ஈரானியக் கொடி ஏந்திய மற்றொரு சரக்குக் கப்பலை அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ்’ (USS Spruance) என்ற ஏவுகணை அழிப்புக் கப்பல் இடைமறித்துச் சிறைபிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் நடவடிக்கைகள் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான கடல்வழிப் போரை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளன.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கமான ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில், “ஈரான் பலமுறை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டது!” என அதிரடியாகப் பதிவிட்டுள்ளார். எந்தவித முன்னறிவிப்புமின்றி ட்ரம்ப் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு, ஈரானுக்கு எதிராக ஒரு பெரிய ராணுவ நடவடிக்கையை அமெரிக்கா திட்டமிடுகிறதோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே விதைத்துள்ளது. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடப்பதாகச் சொல்லப்பட்டாலும், ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த ஆக்ரோஷமான நகர்வுகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தைச் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவின் இந்த அச்சுறுத்தல்களுக்கு ஈரான் தரப்பிலிருந்து கடும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் இதுகுறித்துத் தெரிவிக்கையில், “அமெரிக்காவின் முற்றுகையும், அச்சுறுத்தல்களும் பேச்சுவார்த்தை மேசையை அடிபணிதலுக்கான இடமாக மாற்றும் ட்ரம்ப்பின் கற்பனையே தவிர, மிரட்டல்களுக்குப் பணிந்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்” எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந்தியப் பெருங்கடலில், குறிப்பாக இலங்கை மற்றும் இந்தியாவின் கடல் எல்லைகளுக்கு மிக அருகே நடந்துள்ள இந்த ராணுவ நடவடிக்கை, தெற்காசிய பிராந்தியத்திலும் பெரும் பாதுகாப்புக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Overnight, U.S. forces conducted a right-of-visit, maritime interdiction and boarding of the stateless sanctioned M/T Tifani without incident in the INDOPACOM area of responsibility.⁰⁰As we have made clear, we will pursue global maritime enforcement efforts to disrupt illicit… pic.twitter.com/EGwDe3dBI3
— Department of War 🇺🇸 (@DeptofWar) April 21, 2026