ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில், அதிபர் புதினின் அதிகாரப்பூர்வ இல்லமான கிரெம்ளின் மாளிகைக்கு மிக அருகில் இன்று (மே 4, 2026) அதிகாலை ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. மாஸ்கோவின் சொகுசு குடியிருப்பு பகுதியான மோஸ்பில்மோவ்ஸ்காயா தெருவில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தின் மீது ட்ரோன் மோதியதில் அக்கட்டிடம் சேதமடைந்தது. உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 500 கி.மீ தொலைவில் உள்ள மாஸ்கோவின் வான் பாதுகாப்பு வளையத்தை மீறி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, ரஷ்ய ராணுவத்தின் பாதுகாப்புத் திறனை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கருதி, அவர் மாஸ்கோவிற்கு வெளியே உள்ள அதீத பாதுகாப்பு வசதிகள் கொண்ட ரகசியப் பதுங்கு குழிகளில் (Fortified Bunkers) தஞ்சமடைந்துள்ளதாக ஐரோப்பிய உளவு அமைப்புகள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக, கிராஸ்னோடர் பகுதியில் உள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய நிலத்தடி தளம் ஒன்றிலிருந்து அவர் தற்போது பணிகளை கவனித்து வருவதாகவும், அவரது பாதுகாப்பு அமைப்பான FSO (Federal Protective Service) அவரது நடமாட்டத்தைக் கடுமையாகக் குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெளியே வரும் செய்திகள் புதின் உக்ரைன் தாக்குதலுக்கு பயப்படுவதாகத் தெரிவித்தாலும், உளவு அமைப்புகளின் அறிக்கைகள் வேறு ஒரு திடுக்கிடும் தகவலைத் தருகின்றன. உக்ரைனை விட, தனது சொந்த நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் அல்லது அரசியல் மேல்தட்டு வர்க்கத்தினர் (Political Elites) தனக்கு எதிராக ஒரு “ராணுவப் புரட்சியை” (Coup) முன்னெடுக்கக்கூடும் என்று புதின் அஞ்சுவதாகத் தெரிகிறது. முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் மீது சந்தேகம் நிலவுவதால், புதின் தனது நெருக்கமான பணியாளர்களைக் கூட கடும் கண்காணிப்பிற்கு உட்படுத்தியுள்ளார்.
மாஸ்கோவில் எதிர்வரும் மே 9-ம் தேதி நடைபெறவுள்ள வெற்றி தின அணிவகுப்பில், வரலாற்றில் முதல்முறையாகப் போர் டாங்கிகள் மற்றும் கனரக ராணுவ வாகனங்கள் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்தாலும், உள்நாட்டில் நிலவும் பதற்றமே இதற்குக் காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். புதின் தற்போது நேரடிப் பேட்டிகளைத் தவிர்த்து, முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் (Pre-recorded footage) மூலம் மட்டுமே நாட்டு மக்களுடன் தொடர்பு கொண்டு வருகிறார்