காத்மாண்டு: நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து 53 பேர் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.
நேபாளத்தில் லாபுசே நகரில் இருந்து 93 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் இன்று காலை 6.35 மணிக்கு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த கட்டடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 53 பேர் பலியாகிவிட்டனர்.
ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கம் வந்த இடத்தை சுற்றியுள்ள கட்டடங்கள் சரிந்து விழுந்தன. இதனால் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து சீன நாட்டு செய்தி நிறுவனம் கூறியிருப்பதாவது: டிங்கி மாகாணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சக்தி வாய்ந்த நில அதிர்வுகள் உணரப்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட மையத்தை சுற்றியுள்ள இடங்களில் கட்டடங்கள் சரிந்து விழுந்ததாக தெரிவித்துள்ளது. காட்மாண்டுவில் உள்ள மக்கள் வீட்டை விட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதுகுறித்து ஒருவர் கூறுகையில், நான் தூங்கிக் கொண்டிருந்தேன், அப்போது எனது கட்டில் குலுங்கியது. என் குழந்தைதான் கட்டிலை நகர்ந்துகிறதோ என நினைத்தேன். அதனால் நான் என்னவென பார்க்கவில்லை.
ஆனால் ஜன்னல்கள் ஆடியதை வைத்துதான் நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்தேன். உடனே என் குழந்தையையும் குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு திறந்தவெளி மைதானத்திற்கு வந்துவிட்டேன் என்றார்.
நிலநடுக்கம் ஏற்பட்ட மையம் இமயமலைக்கு அருகே இருப்பதால் உயரமான மலைகள் குன்றுகள் சரிய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. சீனாவில் 29 முறை நில அதிர்வுகள் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்டதாக கூறுகிறது. இவை எல்லாம் இன்று ஏற்பட்ட நில அதிர்வைவிட குறைவானது என சீன ஊடகங்கள் கூறுகின்றன. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் வட இந்தியாவிலும் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் வங்கதேசம், இந்தியா, பூடான், சீனாவிலும் எதிரொலித்ததாக சொல்லப்படுகிறது. மணிப்பூரில், பீகார், டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 8000- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.