பார்சல் டிலிவரிக்குச் சென்று பழக்கம் +1 மாணவியை கர்பமாக்கிய நபர் !

 


திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான மணிகண்டன் என்பவர், தனியார் கூரியர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருக்கும், திருப்பூர் மாநகரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த 16 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகத்தைச் சாதகமாக்கிக் கொண்ட மணிகண்டன், அந்தச் சிறுமியிடம் காதலிப்பதாகக் கூறி ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். ஒருகட்டத்தில், அந்தச் சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகப் பொய் வாக்குறுதி அளித்து, அவரைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த மாணவிக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த மாணவியின் பெற்றோர், அவரைச் சிகிச்சைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாகக் கூறி பேரதிர்ச்சியை அளித்தனர். தனது மகளின் நிலையை அறிந்து நிலைகுலைந்து போன தாயார், இது குறித்துத் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாகச் செயல்பட்ட பெண் போலீசார், சிறுமியை ஏமாற்றிப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மணிகண்டன் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 

தலைமறைவாக இருந்த மணிகண்டனை அதிரடியாகக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவிகளைக் குறிவைத்து அரங்கேறும் இத்தகைய கொடூரச் சம்பவங்களைத் தடுக்க, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் செயல்பாடுகளில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Post a Comment (0)
Previous Post Next Post