அப்படி என்றால் செய்வாய் கிரகத்தில் வசித்த மக்கள் எங்கே சென்றார்கள் ? அங்கே இருந்த பெரும் கடலுக்கு என்ன ஆனது ? இவையே தற்போது எழுந்துள்ள பெரும் கேள்விகள்!
செவ்வாய் கிரகம் என்றாலே நம் நினைவுக்கு வருவது வறண்ட சிவப்பு நிற பாலைவனம் தான். ஆனால், சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகம் பூமியைப் போலவே ஆறுகளும், பரந்த கடற்கரைகளும் கொண்ட நீல நிற கிரகமாகத் திகழ்ந்திருக்கலாம் எனப் புதிய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. Journal reference: Paper: npj Space Exploration DOI: 10.1038/s44453-025-00015-8:
சுவிட்சர்லாந்தின் பெர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர் இக்னேஷியஸ் இண்டி மற்றும் பிரிட்ஸ் ஷ்லூனெகர் ஆகியோர் தலைமையிலான குழுவினர், செவ்வாயில் ஒரு காலத்தில் பிரம்மாண்டமான பெருங்கடல் இருந்ததற்கான மிக நேரடி ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர்.
விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தின் பூமத்திய ரேகைப் பகுதியில் அமைந்துள்ள 'வல்லஸ் மெரினெரிஸ்' (Valles Marineris) என்ற 4000 கிலோமீட்டர் நீளமான பள்ளத்தாக்கை ஆய்வு செய்தனர். குறிப்பாக அங்கிருந்து பெறப்பட்ட உயர்தர வண்ணப் புகைப்படங்களை ஆராய்ந்தபோது, பூமியில் நைல் நதி கடலில் கலக்கும் இடத்தில் உருவாகும் டெல்டா போன்ற அமைப்புகள் செவ்வாயிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள் சுமார் 3.3 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்றும், இவை நதிகள் பெருங்கடலில் சங்கமித்த போது ஏற்பட்ட வண்டல் படிவுகள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) எக்ஸோமார்ஸ் (ExoMars) விண்கலத்தில் உள்ள அதிநவீன கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்த ஆய்வுக்குப் பெரும் உதவியாக இருந்துள்ளன. இந்தத் தரவுகளைக் கொண்டு கணக்கிட்டதில், செவ்வாயில் இருந்த அந்தப் பெருங்கடல் பூமியின் 'ஆர்க்டிக் பெருங்கடல்' (Arctic Ocean) அளவிற்குப் பரந்து விரிந்து இருந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. சூரிய குடும்பத்திலேயே மிகப்பெரிய பள்ளத்தாக்கான வல்லஸ் மெரினெரிஸில் இருந்த நீர்நிலைகள், செவ்வாயின் வடபகுதி தாழ்நிலங்களில் இருந்த மிகப்பெரிய பெருங்கடலுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானி இக்னேஷியஸ் இண்டி உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் நீர் இருந்ததற்கான முந்தைய ஆய்வுகள் மறைமுகமான ஆதாரங்களையே வழங்கிய நிலையில், தற்போதைய கண்டுபிடிப்பு செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்திருக்க வாய்ப்புள்ளதா என்ற தேடலுக்குப் புதிய உயிர் கொடுத்துள்ளது. அதே சமயம், செவ்வாயைப் போலவே பூமியின் அத்தியாவசிய ஆதாரமான தண்ணீரும் எதிர்காலத்தில் ஒருநாள் மறைந்து போகலாம் என்ற எச்சரிக்கையையும் இந்த ஆய்வு நமக்கு உணர்த்துகிறது. செவ்வாயின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்வதற்கும், வேற்று கிரகத்தில் உயிரினங்களைத் தேடுவதற்கும் இந்த 'பழங்கால கடற்கரைகள்' மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகின்றன.



