GO BACK

அதிரும் தலைநகரம்! திமுக அரசை கிழித்துத் தொங்கவிட்ட தளபதி விஜய்!



தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மரணம்? அதிரும் தலைநகரம்! திமுக அரசை கிழித்துத் தொங்கவிட்ட தளபதி விஜய்!

சென்னையில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள கொடூரச் சம்பவங்கள் தமிழகத்தையே உலுக்கியுள்ளன. அடையாறு பகுதியில் காவலாளியாகப் பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நபர், அவரது மனைவி மற்றும் பச்சிளம் குழந்தை என ஒரு குடும்பமே மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழ்வாதாரம் தேடி வந்த இடத்தில் ஒரு குடும்பமே வேரோடு அழிக்கப்பட்டிருப்பது, தமிழகத்தில் சாமானியர்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதற்கிடையே, சென்னை நந்தனம் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியின் கேண்டீனில் பணிபுரிந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தீயாய் பரவி வருகிறது. கல்வி நிறுவன வளாகத்திற்குள்ளேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது பெற்றோர்கள் மற்றும் மாணவிகளிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது 'எக்ஸ்' தளத்தில் திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். "தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்குச் சான்றாக நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன" என்று குறிப்பிட்டுள்ள அவர், தலைநகர் சென்னையில் நடந்துள்ள இந்தப் படுகொலை மற்றும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் கடும் கண்டனத்திற்கு உரியவை எனத் தெரிவித்துள்ளார். தமிழகத்தை நம்பி வந்தவர்களுக்கும் இங்கு பாதுகாப்பு இல்லை என்ற அவலநிலையை இந்த 'கபட நாடக' திமுக அரசு உருவாக்கி வைத்திருப்பதாக அவர் சாடியுள்ளார்.

மேலும் தனது அறிக்கையில், ஆளுங்கட்சியினர் கொள்ளையடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் என்று 'மனசாட்சியே இல்லாமல் பொய் கூறி வருவதாக' விமர்சித்த விஜய், இந்த 'வெற்று விளம்பர மாடல்' ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவுரை எழுதுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

தற்போது இந்தப் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாகக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக விஜய்யின் இந்த அதிரடி அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், ஆளுங்கட்சிக்கு பெரும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையாக உள்ளது.