அஜித்குமார் அடித்து கொலை: DSP சண்முகசுந்தரம் தலைமறைவாக வாய்ப்பு உள்ளது !


சிவகங்கை மாவட்டம் அஜித்குமார் லாக் அப் டெத் (Lock-up death) வழக்கில், தற்போது மிக முக்கியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கினைத் தீவிரமாக விசாரித்து வரும் சிபிஐ (CBI), சமீபத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் (Supplementary Chargesheet) அப்போதைய மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் பெயரைச் சேர்த்திருந்தது. இதனால் எந்த நேரமும் தான் கைது செய்யப்படலாம் என்று பயந்த சண்முகசுந்தரம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் (Anticipatory Bail) கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதி அந்த மனுவைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதனால் டிஎஸ்பி சண்முகசுந்தரம் இனி எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

உண்மையில் அஜித்குமார் மரணத்திற்குப் பின்னால் இருக்கும் பின்னணி மிகவும் துயரமானது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவிலில் தற்காலிகக் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் அஜித்குமார். கோவிலுக்கு வந்த ஒரு பேராசிரியை தனது நகை திருடு போனதாகப் புகார் அளிக்க, அந்தச் சந்தேகத்தின் பேரில் அஜித்குமாரை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த 'Interrogation' விசாரணையாக இல்லாமல் கொடூரத் தாக்குதலாக மாறியுள்ளது. போலீஸார் அஜித்குமாரை மிகக் கடுமையாக அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலின் தீவிரத்தால் அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கில் கடைசியாக வந்த தகவல்கள் இன்னும் அதிர்ச்சியைத் தருகின்றன. சிபிஐ விசாரணையில், போலீஸார் அஜித்தை அடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த டிஎஸ்பி சண்முகசுந்தரம் மிக ஆவேசமாக அஜித்குமாரைத் தாக்கியதாகத் தெரியவந்துள்ளது. ஒரு உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரியே இப்படி அராஜகமாக நடந்துகொண்டது தான் சிபிஐ அவரை முக்கியக் குற்றவாளியாக (Accused) சேர்க்கக் காரணமாக அமைந்தது. சண்முகசுந்தரத்துடன் சேர்த்து இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் என ஒரு பெரிய போலீஸ் டீமே இந்தக் கொலை வழக்கில் தற்போது சிக்கியுள்ளது.

முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டிஎஸ்பி சண்முகசுந்தரம் தலைமறைவாக (Absconding) அதிக வாய்ப்புள்ளதாகத் திருப்புவனம் போலீஸாரே சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய ஒரு போலீஸ் அதிகாரியே, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து ஓடிப் ஒளிவது காவல் துறைக்கே ஒரு கரும்புள்ளியாகப் பார்க்கப்படுகிறது. சிபிஐ அதிகாரிகள் அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். விரைவில் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதே பாதிக்கப்பட்ட குடும்பத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Post a Comment

Previous Post Next Post