GO BACK

பாகிஸ்தான் பன்னு மாவட்டத்தில் பைக் குண்டுவெடிப்பு: ஒரு குழந்தை உட்பட இருவர் பலி; 17 பேர் காயம்

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியான கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் உள்ள மிர்யான் (Miryan) காவல் நிலையத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு திடீரென வெடித்தது. இந்தச் சக்திவாய்ந்த வெடிப்பில் ஒரு குழந்தை உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கடைகள் நிறைந்த பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததால், பொதுமக்கள் 17 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், மோட்டார் சைக்கிளில் 'டைம் பாம்' (Time Bomb) பொருத்தப்பட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்தை இலக்கு வைத்து இந்தச் சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த விபத்தில் காவல் துறையினர் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மாவட்டத் தலைமையக மருத்துவமனை மற்றும் கலீஃபா குல் நவாஸ் மருத்துவமனைக்கு மாற்றினர்.

இந்தக் கொடூரமான தாக்குதலுக்குக் கைபர் பக்துன்குவா கவர்னர் பைசல் கரீம் குண்டி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "மனிதாபிமானமற்ற இத்தகைய செயல்கள் மாகாணத்தின் அமைதியைக் குலைக்கும் முயற்சி" என்று அவர்கள் சாடியுள்ளனர். கடந்த சில மாதங்களாகவே பன்னு மாவட்டத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது. முன்னதாக ஜனவரி மாதத்தில் இதே பகுதியில் நடந்த வெடிவிபத்தில் சிறுவன் ஒருவன் பலியானதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதக் குழுக்கள் அந்நாட்டிற்கு மட்டுமல்லாமல், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. குறிப்பாகத் தலிபான் மற்றும் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளின் நடமாட்டம் இந்தப் பகுதிகளில் அதிகம் இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பைக் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பன்னு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.