கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த அலின் ஷெரின் ஆபிரகாம் என்ற 10 மாதப் பெண் குழந்தை, சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்தக் குழந்தை மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். தங்கள் செல்ல மகள் இனி மீண்டு வரமாட்டாள் என்ற சோகத்திலும், அவளது உறுப்புகள் மூலம் மற்றவர்கள் வாழட்டும் என்ற உயரிய நோக்கில் குழந்தையின் பெற்றோர் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர்.
குழந்தையிடமிருந்து கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் இரண்டு கண்கள் என மொத்தம் ஆறு உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் பெறப்பட்டன. இதில் கல்லீரல், திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 மாதக் குழந்தைக்கும், சிறுநீரகங்கள் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் உள்ள மற்றொரு குழந்தைக்கும் பொருத்தப்பட்டன. இதய வால்வு மற்றும் கண்கள் ஸ்ரீ சித்ரா மருத்துவமனை மற்றும் அமிர்தா மருத்துவமனைகளுக்குத் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் ஐந்து நோயாளிகளுக்குப் புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது.
கேரளாவிலேயே மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்த பெருமை தற்போது 10 மாதக் குழந்தையான அலின் ஷெரினுக்குக் கிடைத்துள்ளது. அந்தப் பிஞ்சு குழந்தையின் தியாகத்தைப் போற்றும் வகையிலும், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், கேரள அரசு அந்தக் குழந்தைக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்த உத்தரவிட்டது. காவல்துறை மரியாதையுடன் நடைபெற்ற இந்த இறுதி நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.
உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் ஏற்கனவே அறிவித்துள்ளன. ஒரு குடும்பம் தங்களின் ஈடுசெய்ய முடியாத இழப்பிலும் காட்டிய மனிதாபிமானத்தைச் சர்வதேச அளவில் பலரும் பாராட்டி வருகின்றனர். 10 மாதக் குழந்தையின் இந்தத் தியாகம், உடல் உறுப்பு தானத்தின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உலகுக்கு உணர்த்தியுள்ளது.
.jpg)